ஸ்கார்லெட் கொலை: கடந்து போன 6 ஆண்டுகள்... நீதி வேண்டி கோவா முதல்வருக்கு வந்த கண்ணீர்க் கடிதம்
பனாஜி: கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளப் பட்ட ஸ்கார்லெட்டின் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி அவரது தாயார், கோவா மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி ஸ்கார்லெட் ஈடன் கீலிங் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவாவின் புகழ்பெற்ற அஞ்சுனா கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
முதலில், தண்ணீரில் மூழ்கியே ஸ்கார்லெட் உயிரிழந்தார் என தகவல் வெளியான நிலையில், அப்பெண்ணின் குடும்பத்தாரின் சந்தேகத்தையடுத்து இரண்டாவது முறை ஸ்கார்லெட் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், ஸ்கார்லெட்டுக்கு அளவுக்கு அதிகமாகப் போதைப்பொருள் கொடுக்கப் பட்டதும், அதனைத் தொடர்ந்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் அம்பலமானது. குற்றவாளிகளால் அரை மயக்கத்தில் கடற்கரையில் விடப்பட்ட ஸ்கார்லெட், அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி பலியானதாக கோவா காவலர்கள் அறிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிளாசிடோ கார்வலோ மற்றும் சாம்சன் டி செளஸா ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் ஸ்கார்லெட்டைப் பாலியல் பலாத்காரம் செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இது நடந்து சரியாக ஆறு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. ஆனாலும், இன்னும் ஸ்கார்லெட் கொலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை தான் வழங்கப் படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப் பட்ட இந்த வழக்கில் இதுவரை 35 சாட்சிகள் விசாரிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், விரைவில் தனது நியாயமான தீர்ப்பு வழங்குமாறு கோவா முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார் ஸ்கார்லெட்டின் தாயார் ஃப்ளோனா. அதில், ‘எனது மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் வெளியில் சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள். உண்மைகள் புதைக்கப் பட்டுவிட்டன. நான் வாதாட சக்தியற்று நிராதரவாக நிற்கிறேன்' என உருக்கமாக அவர் எழுதியுள்ளார்.