என்னா ஆணவம்!...99-இல் பட்டும் திருந்தவில்லையே சோனியா!!... மோடி கடும் தாக்கு
1999-இல் இருந்த ஆணவம் சோனியாகாந்திக்கு அப்படியே உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லி: 1999-இல் இருந்த ஆணவம் சோனியா காந்திக்கு இன்றும் அப்படியே உள்ளது என்று வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்பி சீனிவாஸ் கேசினேனி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது நேற்று விவாதமும் டிவிஷன் வாக்கெடுப்பும் நடைபெற்றது.
விவாதம் நடந்த போது ராகுல் காந்தி பிரதமரை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவரது வெளிநாடு பயணம் குறித்தும் மோடி தன் கண்ணை பார்த்து பேசாதது குறித்தும் ராகுல் பேசியிருந்தார்.
வாஸ்தவம்தான்
அப்போது நடந்த விவாதத்தின் போது சோனியா காந்தியும் பேசினார். அவர் பேசுகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறுவதற்கு போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளது வாஸ்தவம்தான். ஆனால் அதே வேளையில் எங்களிடம் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று யார் கூறியது? என்று கேட்டார் சோனியா.
மேற்கோள்
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடியின் உரை அமைந்திருந்தது. அவர் பேசுகையில் ராகுலையும் சோனியாவையும் பயங்கரமாக விளாசினார். மோடி கூறுகையில் நான் ஒரு வாக்கியத்தை படிக்கிறேன்- " எங்களுக்கு போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இல்லை என்று யார் சொன்னது? என்று சோனியா கூறியதை மேற்கோள்காட்டினார்.
272 பேர் ஆதரவு
அப்போது மோடி மேலும் தனது உரையை தொடர்ந்தார். அதில் பாருங்கள் எத்தனை ஆணவம் சோனியாவுக்கு. நான் 1999-ஆம் ஆண்டை நினைத்து பார்க்கிறேன். ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே நின்று கொண்டு எங்களுக்கு 272 பேர் ஆதரவு உள்ளது. மேலும் சிலர் எங்களுடன் இணைய வேண்டும். எனவே வாஜ்பாய் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ்
இதையடுத்து வாஜ்பாய் ஆட்சியை கலைத்தார். ஆனால் சோனியாவால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. அதே நிலைதான் தற்போதும் நிகழும் என்று பிரதமர் தெரிவித்தார். அப்போது சோனியா காங்கிரஸ் கட்சிக்காரர்களை பார்த்து மோடி என்னை தான் விமர்சிக்கிறார் என்று கூறினார்.
ஆதரவு
இதே போல் பிரதமருக்கு முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் கூறுகையில், சோனியாஜி கணக்கில் கொஞ்சம் வீக்தான். 1999-ஆம் ஆண்டு நடந்தது என்ன என்பது நமக்கு தெரியும். அவர்களின் கணக்கு மீண்டும் பொய்யாக போகிறது. மோடி அரசுக்கு நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் பெரும்பான்மை உள்ளது. அனைத்து திசைகளிலிருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைப்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.