குஜராத்தில் இந்த முறையும் பாஜக ஆட்சிதான்.. காரணம் இதுதான்.. ஆரூடம் சொன்ன "முன்னாள்" தலைக்கட்டு!
காந்திநகர்: குஜராத்தில் இந்த முறை பாஜக மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியை பெறும் என அக்கட்சியின் குஜராத் மாநில மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் ரூபானி ஆருடம் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசுக்கும் இக்கட்சிக்கும் இடையே வெறும் 10 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் இருந்துள்ளது. எனவே இது குறித்து செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.
அதேபோல கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி சில போராட்டங்களை முன்னெடுத்து சற்று பலமாக இருந்ததாகவும், ஆனால் இந்த முறை தன்னுடைய இருப்புக்கே கட்சி தள்ளாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மொத்த வேட்பாளர்கள் 1,621.. கல்லூரி செல்லாமல் 1,124 பேராம்.. குஜராத் தேர்தலுக்கு நடுவே மேட்டர் லீக்
வெற்றி
நாளை 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், விஜய் ரூபானியின் கருத்து பெரும் கவனம் பெற்றிருக்கிறது. ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, "பாஜக கடந்த 2017ல் இருந்ததைவிட தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே 7வது முறையாக நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம். கடந்த தேர்தலுக்கு முன்னர் இருந்த நிலை வேறு. அதாவது, படிதார் சமூகத்தினரின் போராட்டங்கள், தாகூர் சமாஜ் இயக்கத்தின் போராட்டங்கள் பாஜகவுக்கு எதிரான நடந்திருந்தன. இதனால் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு சற்று பலம் இருந்தது. ஆனால் இது எல்லாம் 2017ம் ஆண்டோடு முடிந்துவிட்டது.
பாஜக
2017க்கும் 2022க்கும் இடையில் எந்த ஒரு பெரிய போராட்டங்களும் நடைபெறவில்லை. எனவே அக்கட்சி தற்போது தனது இருப்புக்காகவே போராடி வருகிறது. படிதார் சமூகத்தினரின் போராட்டங்களும் முடிவுக்கு வந்துவிட்டன. இதன் மூலம், பலரும் பாஜகவில் இணைந்துவிட்டனர். இந்த போராட்டங்களை முன்னெடுத்த ஹர்திக் படேல் தானாக முன்வந்து பாஜகவில் இணைந்துவிட்டார். அதேபோல காங்கிரஸின் 15 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்துவிட்டனர். தாகூர் சமாஜ் இயக்கத்தின் தலைவரான அல்பேஷ் தாகூரும் பாஜகவில் இணைந்துவிட்டார். எனவே பாஜக முன்பு இருந்ததைவிட இப்போதும் அதிக பலத்தை கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
வாக்கு விகிதம்
மேலும், இந்த முறை எம்எல்ஏவாக இருந்துகொண்டு ஏன் மீண்டும் போட்டியிடவில்லை என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "குஜராத்தில் பாஜக என்பது ஒரு குடும்பம் போல இருக்கிறது. தான் போட்டியிடுவதை எதிர்த்து பாஜகவால் மட்டுமே முடிவெடுக்க முடியும். நாங்கள் இது குறித்து ஏற்கெனவே பேசி முடிவெடுத்துள்ளோம். இந்த முறை இளைஞர்களுக்கு வழிவிடுவது என்பதுதான் அந்த முடிவு. அதனால்தான் நான் உட்பட மூத்த தலைவர்கள் பலர் தேர்தலில் போட்டியிடவில்லை" என விளக்கமளித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களையும், பாஜக 99 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. பாஜகவின் வாக்கு சதவிகிதம் 49.05 சதவிகிதமாகும். காங்கிரஸ் 41.44% வாக்குகளை பெற்றிருந்தது.
மும்முனை போட்டி
2012 தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்த தொகுதிகளிலிருந்து காங்கிரஸ் 16 தொகுதிகளை வென்றெடுத்திருந்தது. ஆனால், 2017 தேர்தலுக்கு பின்னர் 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவிவிட்டனர். 2022ம் ஆண்டு பொதுத் தேர்தலை பொறுத்த அளவில், பாஜக-காங்கிரஸ் மட்டுமல்லாது ஆம் ஆத்மியும் களத்தில் இறங்கியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தேர்தலிலும் ஆம் ஆத்மி சில இடங்களில் போட்டியிட்டிருந்தது, ஆனால் டெபாசிட் இழந்து அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து. இந்நிலையில் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது மீண்டும் புதிய உற்சாகத்துடன் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. குஜராத்தில் காங்கிரசுக்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி இதனை கைப்பற்றும் என்றும், இதனால் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் ஏற்கெனவே அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். இந்நிலையில் விஜய் ரூபானி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.