மோடி அலை கோவிந்தா... நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கே.. சிவசேனா தலைவரின் அடடே பேச்சு
மோடி அலை மங்கிப் போய்விட்டது..நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுல் காந்திக்கே இருக்கிறது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் பேசியுள்ளார்.
டெல்லி: நாட்டில் மோடி அலை என்பது மங்கிப் போய்விட்டது.... இனி நாட்டை வழிநடத்தும் தகுதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்குதான் இருக்கிறது என பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவுத் எம்.பி. கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கூட்டணியில் இருக்கிறது சிவசேனா. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் சிவசேனா இடம்பெற்றுள்ளது.
இருந்தபோதும் தொடர்ந்து பாஜகவையும் பிரதமர் மோடியையும் சிவசேனா விமர்சித்துக் கொண்டே வருகிறது. தற்போது குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கருத்து கணிப்புகள்
இத்தேர்தலில் பாஜக வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தபோதும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் என்ன நடக்குமோ என்கிற அச்சத்துடன்தான் இருக்கின்றனர்.
பாஜகவுக்கு நெருக்கடி
ஜிஎஸ்டி விவகாரம், பட்டேல் இடஒதுக்கீட்டு பிரச்சனைகள் நிச்சயம் பாஜகவுக்கு பாதகமாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டிவி சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவுத் பங்கேற்று கூறியதாவது:
மோடி அலை இல்லை
நரேந்திர மோடி அலை என்பது கடந்த் 2014 லோக்சபா தேர்தலில்தான் இருந்தது. இப்போது மோடி அலை என்பது மங்கிப் போய்விட்டது.
ராகுலுக்கு சிவசேனா ஆதரவு
ஜிஎஸ்டிக்கு எதிராக குஜராத்தின் சூரத்தில் மக்கள் வீதிக்கு வந்து போராடி கோபத்தைக் காட்டினார்கள். நிச்சயம் குஜராத்தில் பாஜக மிகப் பெரும் சவாலை சந்திக்க இருக்கிறது.
நாட்டை வழிநடத்தக் கூடிய தகுதி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்குதான் இருக்கிறது. அவரை பப்பு என கிண்டலடித்துக் கொண்டிருக்கக் கூடாது. அது நிச்சயம் தவறுதான். இவ்வாறு சஞ்சய் ராவுத் கூறினார்.