அனுமதியே கொடுக்காத நிலையில்.. 16 வயது சிறுவனுக்கு தடுப்பூசி.. உடல்நலம் பாதிப்பு.. ம.பி.யில் ஷாக்!
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளான். இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி திட்டம் தொடங்காத நிலையில் இந்த சிறுவன் தடுப்பூசி போடப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தின் அம்பா பகுதியில் உள்ள பாக்கா புரா பகுதியில் அந்த சிறுவன் தடுப்பூசி போட்டுள்ளான்.

சிறுவனுக்கு தடுப்பூசி
மொரேனா மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள தடுப்பூசி மையத்தில் கமலேஷ் குஷ்வாஹா என்பவரது மகன் பில்லுவிற்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்பிறகு சிறுவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்துள்ளது. திடீரென மயக்கம் போட்டு விழுந்த அவனுக்கு வாயில் நுரை தள்ள ஆரம்பித்துள்ளது. உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக அம்பாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குள்ள டாக்டர்கள் குவாலியரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.

சுகாதார அதிகாரி
ஆனால் சிறுவன் குவாலியர் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ''சிறுவன் பில்லு குவாலியரை அடைந்தாரா? இல்லையா? என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம். உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, அவர் குவாலியருக்குச் செல்வதற்குப் பதிலாக அவரது வீட்டிற்குத் திரும்பினார்'' என்று மொரேனா மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் ஏடி சர்மா தெரிவித்தார்.

விசாரணைக்கு உத்தரவு
இன்று காலை பில்லுவின் வீட்டிற்கு ஒரு மருத்துவ குழுவை அனுப்பி இருக்கிறோம். சிறுவன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டாரா? என்பது குறித்து பரிசோதிக்கிறோம். அரசே அனுமதி அளிக்காத நிலையில் சிறுவனுக்கு எப்படி தடுப்பூசி டோஸ் கொடுக்கப்பட்டது? என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுவனின் ஆதார் அட்டை சரிபார்க்கப்படும். இவனுக்கு தடுப்பூசி போட்டவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக டாக்டர் ஏடி சர்மா கூறினார்.

6 வயதுடையவர்
சிறுவன் பில்லுவின் ஆதார் அட்டையின் படி, அவர் 16 வயதுடையவர் என்பவர் உறுதியாகி இருக்கிறது. கோக் சிங் க புராவில் வசித்து வருகிறார். அவனது பிறந்த தேதி ஜனவரி 1, 2005 என்று சிறுவனின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூறினார்கள். இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவில்லை.

ஜைடஸ் காடிலா தடுப்பூசி
சைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான ஜைடஸ் காடிலா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இது 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக போடப்படும் தடுப்பூசியாகும். மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையில் ஜைடஸ் காடிலா தடுப்பூசி சுமார் 66.6% வரை தடுப்பாற்றல் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications