அஃப்சல் குரு 8ஆம் ஆண்டு நினைவு நாள்... காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது
ஸ்ரீநகர்: நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குருவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற கட்டடத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அஃப்சல் குரு என்ற பயங்கரவாதி.

விசாரணைக்குப் பிறகு இவர், கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். ஆண்டுதோறும் இவர் உயிரிழந்த தினத்தன்று காஷ்மீரில் சில பிரிவினைவாத அமைப்புகள் கடையடைப்பிற்கு அழைப்புவிடுக்கும்.
இந்தாண்டும் சில பிரிவினைவாத அமைப்புகள் இன்றும் மற்றும் பிப்ரவரி 11 ஆம் தேதிகளில் முழுக் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தன. பிப்ரவரி 11ஆம் தேதி மக்பூல் பட் என்ற மற்றொரு பிரிவினைவாதி தூக்கிலிடப்பட்ட நாளாகும்.
கடையடைப்பு குறித்த நோட்டீஸ் ஸ்ரீநகரிலும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகர்களிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நோட்டீஸ்களை யார் எப்போது விநியோகித்தனர் என்பது குறித்த தகவல்களை உறுதி செய்யப் பாதுகாப்புப் படையினரால் முடியவில்லை.
இதன் காரணமாக இன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஸ்ரீநகரிலுள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அதேபோல பொதுப் போக்குவரத்துகளும் பெரும்பாலும் இயங்கவில்லை. ஆனால், தனிநபர்கள் கார்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை வழக்கம்போல இயங்கின. இதேபோல காஷ்மீர் மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதற்கு முன் அஃப்சல் குருவின் நினைவு நாளில் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும். ஆனால், இந்த முறை அப்படி எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேபோல இணைய சேவையும் முடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications