தமிழகத்தில் காங். ஆட்சியை ஃபினிஷ் செய்த திமுக பாணியில் சித்தராமையா அதிரடி.. கர்நாடக பாஜக திண்டாட்டம்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் திமுகவின் மாநில முன்னுரிமை, தமிழ் மொழி முன்னுரிமை கொள்கைகளில் சிக்கி, காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததை போல இப்போது, பாஜகவின் செல்வாக்கை செல்லாக்காசாக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 1985ம் ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சி காலத்திற்கு பிறகு கர்நாடகாவில், தொடர்ந்து மீண்டும் அதே முதல்வர் தலைமையிலான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தது கிடையாது.
ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையே ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் எடுத்துள்ளனர். அதை இந்த முறை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வரான சித்தராமையா தீவிரமாக உள்ளார்.

பாஜக பாணியில் பதிலடி
இதற்காக அவர் தமிழகத்தில் திமுக ஆரம்ப காலகட்டங்களில் எடுத்ததை போன்ற மாநிலம், மொழி சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி பாஜகவை பந்தாட தொடங்கிவிட்டார். மேலும், பாஜக பிற மாநிலங்களில் என்ன மாதிரி பிரச்சாரங்களை முன்னெடுத்து காங்கிரசை வீழ்த்தியதோ, அதேபோன்ற பிரச்சாரங்களை கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக சித்தராமையா முன்னெடுத்துள்ளார்.

ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு
தேசிய கட்சியான காங்கிரசின் முதல்வராக இருந்தபோதும், பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தியில் எழுதப்பட்ட தகவல் அறிவிப்புகளை தார் பூசி அழித்த கன்னட அமைப்பினர் போராட்டங்களுக்கு சித்தராமையா ஆதரவு அளித்தார். ஹிந்தியை அழித்தெடுத்தார். தமிழகத்தில் எப்போதோ ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அரசியல் கட்சி என்ற வகையில் அதில் திமுக முன்னிலையில் இருந்தது. ஆனால் கர்நாடகாவில் ஹிந்தி என்பது சகஜமாக ஏற்கப்பட்ட மொழி.

பாஜகவுக்கு செக்
தமிழ் போன்ற மொழிகளில் எழுதப்பட்டிருந்தால்தான் போராட்டம் நடத்த கன்னட அமைப்பினர் பழக்கி வைக்கப்பட்டிருந்தனர். தமிழையே பெரும் எதிர்ப்புக்குரிய மொழியாக அவர்கள் பார்த்தனர். ஆனால் பாஜக ஹிந்தியின் மூலம், இந்தியாவின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற முடியும் என நினைக்கிறது. இதையறிந்து ஹிந்தி என்பது கன்னடத்திற்கு எதிரானது என பிரச்சாரங்களுக்கு ஊக்கம் கொடுத்து பாஜகவுக்கு செக் வைத்துவிட்டார் சித்தராமையா.
|
மாநிலத்திற்கே முதல் உரிமை
இதேபோல தேசத்தை விட மாநிலம்தான் பெரிது என்ற கோஷங்களை அவர் முன்னெடுக்கிறார். நதிநீர் பிரச்சினைகளில் பாஜகவுக்கு செக் வைக்கிறார். காவிரி, கோவாவுடனான மகதாயி விவகாரங்களில் பாஜக கருத்தை கூற கேட்கிறார். கோவாவில் பாஜக ஆட்சி செய்வதால் பாஜகவினரால் பதில் பேச முடியவில்லை. ஞாயிறன்று பெங்களூர் வந்த பிரதமர் மோடியை டிவிட்டரில் வரவேற்ற சித்தராமையா, அப்படியே, மகதாயி விஷயம் பற்றி பேசவும் என குறிப்பிட்டார். இதன் மூலம் மோடி எதை பேச வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வகையில் சித்தராமையா செயல்படுகிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பேசினாலும் பிரச்சினை
மகதாயி நதி நீர் பிரச்சினை என்பது பாஜக வலுவாக உள்ள வட கர்நாடக மாவட்டங்களின் ஜீவாதாரமாக உள்ளது. எனவே அந்த விஷயத்தை அதிகம் விவாத பொருளாக்கி, பாஜகவை மடக்குவதில் சித்தராமையா குறியாக உள்ளார். மேலும், கர்நாடகாவுக்கு தனி கொடி வேண்டும் என்ற அறிவிப்பை முன்னிலைப்படுத்தினார் சித்தராமையா. ஒரே நாடு என்ற கொள்கை கொண்ட பாஜகவால் இதற்கு எதிராக பேசாமல் இருக்க முடியவில்லை. பேசினாலோ, கர்நாடக விரோதிகள் என்ற முத்திரை சித்தராமையாவால் குத்தப்பட்டுவிடுகிறது. இதுவும் பாஜகவுக்கு கர்நாடகாவில் மிகப்பெரிய செக்காக அமைந்துவிட்டது.

ஜாதி வாக்குகள் சிதறல்
லிங்காயத்து ஜாதி வாக்குகள் பாஜகவுக்கு எப்போதுமே போகக்கூடியவை. கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் போன்றவர்கள் இந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், லிங்காயத்து என்பது இந்து மதப்பிரிவினர் கிடையாது, தனி மதப்பிரிவினர் என்ற சமீபத்திய கோஷங்களுக்கு சித்தராமையாவின் ஆதரவு உள்ளது. இதை பாஜக ஆதரிக்கவில்லை. அந்த வாக்கு வங்கியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

சித்தராமையா பதிலடி
மொத்தத்தில், 'இந்து மதம், இந்தி மொழி, இந்தியா முதலில்' ஆகிய கோஷங்கள் அடிப்படையில் ஒரே குடையின்கீழ் மக்களை திரட்ட வேண்டும் என்ற பாஜகவின் முயற்சிகளுக்கு, கன்னட மொழி, கர்நாடகா முதலில் என்ற கோஷங்கள் மூலம் பதிலடி கொடுக்கிறார் சித்தராமையா. மொழி, மாநிலம், தண்ணீர் விவகாரங்களில் கன்னடர்கள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது வரலாறு. எனவே அதற்கு நெய் ஊற்றி தேர்தல் ஆதாயத்தை அறுவடை செய்கிறார் சித்தராமையா. இதனால் கர்நாடகா மற்றும் கன்னட மொழிக்கு நல்லது நடந்தால் சரிதான் என்பது பெருவாரியான அம்மாநில மக்கள் அபிப்ராயமாக உள்ளது.

காங்கிரஸ் மவுனத்திற்கு காரணம்
சித்தராமையா, மாநில கட்சி தலைவரை போல செயல்பட்டாலும், காங்கிரஸ் தலைமை அதில் தலையிடுவதில்லை. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே பெரிய மாநிலம் கர்நாடகாதான். அதை தக்க வைக்க வேண்டும் என்பதே காங்கிரசின் குறி. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு அது பெரும் பின்னடைவாக உருவாகும் என்பதும், அடுத்து நடைபெற உள்ள ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில தேர்தல்களில் இதன் முடிவு எதிரொலிக்கும் என்பதும் காங்கிரஸ் மேலிடத்தின் மவுனத்திற்கு காரணம். எனவே, பாஜக தலைவர்கள் போடும் ஒவ்வொரு பந்துகளையும் சிக்சர்களாக விட்டு விளாசிக்கொண்டுள்ளார் சித்தராமையா.












Click it and Unblock the Notifications