அதெல்லாம் தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிராகரித்தார் சித்தராமையா
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரை திறந்து விட முடியாது என்று மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. கோடை காலத்தில் விவசாயம் செய்ய தண்ணீரின்றி தமிழக விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
காவிரிக்கான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய இன்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அவகாசம் அளித்தது. ஏற்கெனவே அளித்த 6 வாரங்கள் போதாததால் மீண்டும் இரு வாரங்கள் அவகாசம் கேட்டு அந்த அவகாசமும் இன்றுடன் முடிந்துவிட்டது.
மீண்டும் காலஅவகாசம்
காவிரி விவகாரத்தில் திட்டம் ஒன்றை உருவாக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட 6 வார கால அவகாசத்தை தொடர்ந்து மேலும் இரு வாரங்களுக்கு கால அவகாசம் வழங்க மத்திய அரசு கேட்டுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்ட போதிலும் அமைச்சர்கள் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு வரைவு திட்டத்தை அனுப்பி ஒப்புதல் வாங்க முடியவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
4 டிஎம்சி திறக்க உத்தரவு
இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு மே மாதத்துக்குள் 4 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து காவிரி நீரை தர முடியுமா முடியாதா என்று நீதிபதி கோபமாக கேட்டார்.
திறக்க முடியாது
இந்த தீர்ப்பை நிராகரித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில் கர்நாடக அணைகளில் தமிழகத்துக்கு திறந்து விடும் அளவுக்கு போதிய நீர் இல்லை. எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது.
அரசு வழக்கறிஞருடன் ஆலோசனை
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து கர்நாடக அரசு வழக்கறிஞருடன் விவாதிப்பேன். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் சித்தராமையா.