பஞ்சாப் டூ சிங்கப்பூர்.. 7.55க்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்ட விமானம்..கொந்தளித்த பயணிகள்..என்னாச்சு?
அமிர்தசரஸ்: அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து 35 பயணிகளை விட்டுவிட்டு முன்கூட்டியே சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் புறப்பட்டு சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த வாரம் பெங்களூருவில் 55 பயணிகளை விட்டு விட்டு அவர்களின் லக்கேஜ்களை மட்டும் ஏற்றிக்கொண்டு கோ பர்ஸ்ட் விமானம் சென்றது சர்ச்சையான நிலையில் மறுவாரமே பஞ்சாப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமானம் கிளம்பி சென்றதாக புகார் எழுந்துள்ளது.
பேருந்து நிலையங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பேருந்து புறப்பட்டு சென்று விட்டது... இதனால் எங்கள் ஊருக்கு போக முடியவில்லையே என சில சமயங்களில் பயணிகள் ஆதங்கப்படுவதை பார்த்து இருப்போம். இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை.
ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் 35 பயணிகள் விமானத்தை பிடிக்க முடியாமல் விட்டு இருக்கின்றனர்.
எவ்ளோ நேரம்தான் வெயிட் பண்றது?.. பயணிகளை விட்டுவிட்டு சர்ர்ன்னு பறந்த விமானம்.. பெங்களூரில் 'ஷாக்'
பஞ்சாப் மாநிலத்தில் தான்..
என்னங்க சொல்றீங்க... என நீங்கள் புருவத்தை உயர்த்தி படிப்பது புரிகிறது.. இத்தனைக்கும் இந்த சம்பவம் வெளிநாடுகளில் நடக்கவில்லை இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தான் நடந்துள்ளது. அமிர்தசரசில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தான் இப்படி ஷெடுல் டைமிற்கு முன்னதாகவே புறப்பட்டு சென்றதாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
முன்னதாக புறப்பட்டு சென்ற விமானம்
பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் என்ற சிங்கப்பூரை சேர்ந்த விமான நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று இரவு 7.55 மணிக்கு சிங்கப்பூர் செல்வதாக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய சுமார் 280 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் விமானம் நேற்று ஷெடூல் டைமிற்கு முன்பாகவே அதாவது குறிப்பிட்ட பயண நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்
அதுவும் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் இல்லை. கிட்டதட்ட 4 மணி நேரம் அதாவது 3 மணிக்கே புறப்பட்டு சென்றது. ஆனால் விமானம் முன்கூட்டியே புறப்பட்டு சென்றது தெரியாமல் சுமார் 35 பயணிகள் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருந்த நேரத்திற்கே வந்து இருக்கின்றனர். ஆனால், வந்த பிறகுதான் தெரிந்து இருக்கிறது.. தாங்கள் செல்ல வேண்டிய விமானம் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விட்டது என்பது. இதனால், ஆவேசம் அடைந்த பயணிகள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது
பயணிகள் நடத்திய இந்த போராட்டத்தால் விமான நிலையம் பரபரப்புக்குள்ளானது. மேலும் விமான நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகளும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது விமானத்தின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும்.. இது குறித்து பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் முன்கூட்டியே தெரியப்படுத்தி விட்டதாகவும் விளக்கம் அளித்தனர்.
ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கம்
எனினும், இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கத்தை அளிக்குமாறு அமிர்தசரஸ் விமான நிலைய அதிகாரிகளுக்கும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் விமான போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளை விட்டுவிட்டு முன்கூட்டியே புறப்பட்டு சென்றது தொடர்பான சர்ச்சைக்கு பதில் அளித்துள்ள ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம், "விமானத்தின் புறப்பாடு நேர மாற்றம் குறித்து பயணிகளுக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது" என்றனர்.
புக்கிங் செய்து கொடுத்த ஏஜெண்ட்
விமான நிலைய அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், "30 பயணிகளுக்கும் விமான டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்த ஏஜெண்ட் விமானம் புறப்பாடு நேரத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. எனவே, 3 மணியளவில் வந்திருந்த பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு சென்று விட்டது" என்று தெரிவித்தனர். கடந்த வாரம் பெங்களூருவில் கோ பர்ஸ்ட் நிறுவனம் விமானம் போர்ட்டிங் பாஸ்களுடன் காத்திருந்த 55 பயணிகளை விட்டுவிட்டு அவர்களின் லக்கேஜ்களுடன் புறப்பட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மறுவாரமே மேற்கண்ட சர்ச்சை எழுந்துள்ளது.