ஆந்திராவில் அதிவேகமாக சென்ற கார்... விபத்தில் தீ பிடித்து 6 பேர் பலி
சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..
புத்தாலபட்டு-நாயுடுபேட்டை சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர டிவைடரில் மோதியதில் தீப்பிடித்தது..
சந்திரகிரி மண்டலம் அருகே நடந்த விபத்தில் தீயில் கருகி குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடீரென தீ பிடித்த கார்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தாலபட்டு-நாயுடுபேட்டை சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த காரில் கைக்குழந்தை உள்பட 8 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். இந்த கார் சந்திரகிரி மண்டலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாலையின் அங்கும் இங்கும் வேகமாக சென்ற கார் டிவைடரில் மோதியது. இதனால் தலைக்குப்புற கார் கவிழ்ந்தது. கார் கவிழ்ந்த சிறிதுநேரத்தில் பெட்ரோல் கசிய ஆரம்பிக்க அது உடனடியாக தீப்பிடித்தது.

6 பேர் விபத்தில் பலி
ஏற்கனவே படுகாயங்களுடன் காரில் உயிருக்கு போராடிய நிலையில் தீ பிடித்துவிட்டதால் அதில் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். தங்களால் முடிந்தவரை அதில் இருப்பவர்களை காப்பாற்ற முயன்றனர். கடும் போராட்டத்திற்கு பின்னர் காரில் உயிருக்கு போராடிய 3 பேர் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2 பேர் மட்டும் தப்பினர்
மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் சிக்கினாலும் உடனடியாக தீ பிடித்ததற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டது
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள்ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகர மாவட்டங்களை சேர்ந்த மேதமர்த்தி மற்றும் பூசபத்ரிகா கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்தில் 6 மாதக் குழந்தை ஜிஷித்தா, 30 வயதுடைய மீனா, 36 வயதுடைய சுரேஷ்குமார், 51 வயதுடையை பைதி ஹேமாவதி, 61 வயதுடைய கோவிந்தராவ் மற்றும் 54 வயதுடைய ஸ்ரீராம மூர்த்தி ஆகியோர் உயிரிழந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications