ஜனாதிபதி தேர்தல்: திரிபுரா திரிணாமுல் 6 எம்எல்ஏக்கள் பாஜகவின் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு-மமதா ஷாக்!
குவஹாத்தி: ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு திரிபுராவைச் சேர்ந்த 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால் அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. பாஜகவின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ராம்நாத் கோவிந்தும் மீராகுமாரும் மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் ராம்நாத் கோவிந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக திரிபுராவைச் சேர்ந்த 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீரென அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் முகாமிட்டிருந்த ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் 6 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணையப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
திரிபுரா மாநிலத்தில் நீண்டகாலமாக இடதுசாரிகள் ஆட்சியே நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூரில் பாஜக கட்சிகளை உடைத்தும் கட்சி தாவ வைத்தும் கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்றிவிட்டது. நாகாலாந்தில் ஆட்சியில் பங்கு வகிக்கிறது.
தற்போது திரிபுராவிலும் ஆட்சியைக் கைப்பற்ற்ற முனைப்பு காட்டுகிறது. அடுத்த ஆண்டு திரிபுராவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு வளைத்துப் போட்டுள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.