முதல்வர் பதவிக்காக அடித்துக் கொள்ளும் பாஜக- சிவசேனா: 25 ஆண்டுகால கூட்டணி முறிந்தது!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் தொடரும் இழுபறியால் 25 ஆண்டுகால பாஜக- சிவசேனா கூட்டணி முறிவது உறுதியாகி உள்ளது. உண்மையில் இவர்களுக்குள் பிரச்சனையே யாருக்கு முதல்வர் பதவி என்பது தான். கூட்டணியில் அதிக இடங்களைப் பிடித்து அதிக இடங்களைக் கைப்பற்றினால் தான் முதல்வர் பதவியை பிடிக்க முடியும் என்பதால், இரு கட்சிகளும் அதிக இடங்களுக்காக முட்டி மோதிக் கொண்டுள்ளன.
உண்மையில் இவர்களுக்குள் பிரச்சனையே யாருக்கு முதல்வர் பதவி என்பது தான். கூட்டணியில் அதிக இடங்களைப் பிடித்து அதிக இடங்களைக் கைப்பற்றினால் தான் முதல்வர் பதவியை பிடிக்க முடியும் என்பதால், இரு கட்சிகளும் அதிக இடங்களுக்காக முட்டி மோதிக் கொண்டுள்ளன.
மகாயுதி...
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ‘மகாயுதி' என்று அழைக்கப்படும் சிவசேனா- பா.ஜனதா கூட்டணியில் சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா, ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா, சிவ் சங்க்ராம் மற்றும் இந்திய குடியரசு கட்சி ஆகிய 4 சிறிய கட்சிகளும் இடம் பெற்று உள்ளன. இந்த சிறிய கட்சிகளுக்கு 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
போர்க்கொடி
இதனால், அதிர்ச்சிக்குள்ளான அந்த கட்சி தலைவர்கள் நேற்று காலை கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இது தொடர்பாக சிவ் சங்க்ராம் கட்சி தலைவர் சதபாவு கோட் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவசேனா- பா.ஜனதா எங்கள் முதுகில் குத்திவிட்டது. எனவே நாங்கள் மகாயுதி கூட்டணியில் இருந்து விலகி, புதிய கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க போகிறோம். மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயால் தான் நாங்கள் மகாயுதி கூட்டணிக்கு அழைத்து வரப்பட்டோம். அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம்.
7 தானா?
இந்த நிலையில் மகாயுதி கூட்டணியில் எங்களுக்கு வெறும் 7 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அவமானப்படுத்தி விட்டனர். இத்தனை காலம் அவர்களது கூட்டணியில் இருந்ததற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் உங்களுக்கு சுமையாக இருக்கிறோமா என்று ஏற்கனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிவசேனா- பா.ஜனதா தலைவர்களிடம் கேட்டோம்.
சுழற்சி முறையில் முதல்வர் பதவி
மேலும் எங்களுக்கு ஒரு தொகுதி கூட வேண்டாம். மாறாக, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே மற்றும் ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா தலைவர் மகாதேவ் ஜங்கர் ஆகியோரை சுழற்சி அடிப்படையில் முதல்வர் ஆக்குங்கள் என்று வலியுறுத்தினோம் என்றார்.
சமாதான படலம்
இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா தலைவர் ராஜூ ஷெட்டி மற்றும் சிவ் சங்க்ராம் தலைவர் விநாயக் மேத்தே ஆகியோர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினர்.
உத்தவ் உறுதி
இந்த பேச்சுவார்த்தையின்போது, மகாயுதியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளுக்கு கண்ணியமான அளவில் தொகுதி ஒதுக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே, அவர்களிடம் உறுதி அளித்தார். எனவே, கூட்டணியில் ஏற்பட்ட திடீர் விரிசல் உடனடியாக சரிசெய்யப்பட்டு சுமூக முடிவு எட்டப்பட்டது.
மீண்டும் கூட்டணியில்
இதனால் அந்த கட்சிகளும், கூட்டணி விலகல் அறிவிப்பில் இருந்து திடீர் பல்டி அடித்தனர். இந்த கட்சிகள் மீண்டும் சிவசேனா கூட்டணிக்கு திரும்பின. பேச்சுவாத்தைக்கு பிறகு வெளியே வந்த ராஜூ ஷெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தவ் தாக்கரே உடனான இந்த சந்திப்பு வெற்றியில் முடிந்தது. அனைத்து கட்சியினரும் சந்தோஷப்பட கூடிய அளவுக்கு தொகுதிகளை ஒதுக்குமாறு அவரிடம் கேட்டோம். மேலும், 150 தொகுதிகளில் நீங்களும் 120 தொகுதிகளில் பா.ஜனதாவும் போட்டியிடுங்கள். எங்களுக்கு 18 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தாலே போதும். நாங்கள் திருப்தி அடைவோம் என்று கூறினோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தவ் தாக்கரே உறுதியளித்தார் என்றார்.
தொடரும் இழுபறி
இருப்பினும் இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
அமித்ஷா பயணம் ரத்து
இதனிடையே சிவசேனாவும் பாஜகவும் போட்டியிடும் தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்த நிலையில் கூட்டணி குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்காக இன்று மும்பை வருகை தர இருந்த பாஜக தலைவர் அமித்ஷாவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் உத்தவ் தாக்கரேயுடன் அமித்ஷா தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் பதவிக்காக
பாஜகவும் சிவசேனாவும் தங்களுக்கான தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை. அப்படிக் குறைத்தால் எங்கே தங்கள் கட்சிக்கு முதல்வர் பதவி கிடைக்காதோ என்ற ஈகோதான் இதற்குக் காரணம்.
பரஸ்பர குற்றச்சாட்டு
தற்போதைய சிக்கலுக்கு இரு கட்சிகளும் பரஸ்பரம் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. கூட்டணியை முறிப்பதில் பாஜகதான் அவசரம் காட்டுகிறது என்று சிவசேனாவும் சிவசேனாவின் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை என்று பாஜகவும் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் 25 ஆண்டுகால கூட்டணி உடைவது உறுதியாகி இருக்கிறது.