விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவவில்லையா?... ஸ்மிருதியின் அலுவலகம் மறுப்பு
டெல்லி: யமுனா எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டு அதில் காயமடைந்தவர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி உதவவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகளுக்கு அவரது அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
யமுனா எக்ஸ்பிரஸ் வேயில் ஸ்மிருதியின் கார் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்து ஏற்பட்டது. அமைச்சருடன் சென்ற ஹோண்டா கார் மோதியதில் இன்னொரு காரில் பயணித்த டாக்டர் ரமேஷ் நாகர் குடும்பத்தினர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் நாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகள் சான்டிலி நாகர் காயமடைந்தார். இதுகுறித்து ஏஎன்ஐக்கு பேட்டி அளித்துள்ள சான்டிலி நாகர், எங்களது கார் விபத்தில் சிக்கியதும், அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது காரை விட்டு இறங்கி வந்தார். அவரிடம் நான் ஓடிப்போய் எனது தந்தையைக் காக்க உதவுமாறு கோரி வேண்டினேன். கையெடுத்துக் கும்பிட்டேன். கெஞ்சினேன். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக அங்கு வந்த இன்னொரு காரில் ஏறிப் போய் விட்டார் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த விபத்து தொடர்பாக முன்பு டிவிட்டரில் பதிவிட்டிருந்த இராணி, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாக கூறியிருந்தார்.
Good Samaritan Manoj Chopra and his wife also helped injured citizens. God bless them for their empathy and kindness.
— Smriti Z Irani (@smritiirani) March 5, 2016
Tried to help the injured who were lying on the road for quiet sometime and ensured they reach a hospital. Pray for their safety.
— Smriti Z Irani (@smritiirani) March 5, 2016
ஆனால் விபத்தில் உயிரிழந்த டாக்டரின் மகள் கூறியது புதிய பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஸ்மிருதியின் அலுவலகம் மறுத்துள்ளது. இதுகுறித்து ஸ்மிருதியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 5315 என்ற எண் கொண்ட கார் ஸ்மிருதியுடன் வந்த கார்களில் ஒன்று அல்ல. அது வேறு கார்.
There was a pile up of vehicles due to an accident on the expressway. Unfortunately the police vehicle before mine & my car also crashed.
— Smriti Z Irani (@smritiirani) March 5, 2016
விபத்தால் தான் பாதிக்கப்பட்டாலும் கூட ஸ்மிருதி காரை விட்டு இறங்கி காயமடைந்தவர்களுக்கு உதவினார். போலீஸ் அதிகாரி ஒருவரை அழைத்து உடனடியாக ஆம்புலன்ஸைக் கொண்டு வர உத்தரவிட்டார். மேலும் அமைச்சரின் கார் அந்த இடத்தை நெருங்குவதற்கு முன்பே அங்கு விபத்து நடந்து விட்டிருந்தது என்று கூறியுள்ளார்.