“கிண்டலடிக்கும் ஆண்கள் முகத்தில் ஓங்கி ஒரு குத்து”... பேஸ்புக்கில் ஸ்மிருதி ஆவேசம்
டெல்லி: பீகார் கல்வி அமைச்சர் டியர் என அழைத்தது தொடர்பாக வார்த்தைப் போர் சர்ச்சையில் சிக்கிய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது பேஸ்புக் பக்கத்தில் பெண்கள் தங்களைக் கிண்டல் செய்யும் ஆண்கள் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட வேண்டும்' எனக் குறிப்பிட்டு பெரிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு பீகார் கல்வியமைச்சர் அசோக் சவுத்ரி, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் டிவிட்டர் பக்கத்தில் கல்விக் கொள்கை பற்றி கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். அதில் அவர் ஸ்மிருதியை டியர் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் ஆவேசமடைந்த ஸ்மிருதி, அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்காமல், ‘பெண்களை டியர் என அழைத்து தொடங்குவது சரியல்ல' என தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் அசோக் சவுத்ரி, "பணி ரீதியிலான தகவல் தொடர்புகளை' டியர் ' என தொடங்கலாம்' என பதிலளித்தார்.
வார்த்தைப் போர்...
தொடர்ந்து இந்த விஷயத்தில் இருவருமே விட்டுக் கொடுக்காமல் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி வருகின்றனர். இந்த வார்த்தைப் போர் சமூகவலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பேஸ்புக்கில் கடிதம்...
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக கேலி செய்யும் ஆண்களை எதிர்த்து பெண்கள் போராட வேண்டும், அமைதியாகச் செல்லக் கூடாது என்ற கருத்தில் ஸ்மிருதி இரானி தனது பேஸ்புக் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியுள்ளார்.
வாயை மூடு...
மேலும், அதில் அவர் கூறியிருப்பதாவது, "பையன்களால் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகிறபோது, அவர்கள் எதைச் சொன்னாலும், பெண் பிள்ளைகள் பதில் அளிப்பதை தவிர்த்து விட வேண்டும்' என்று கூறியே வீடுகளில் வளர்க்கின்றனர். பெண்களை அவமானப்படுத்தும்போது, அவர்களை எதிர்த்து ஏன் கேள்வி கேட்கக் கூடாது?... தினசரி வாழ்வில் பெண் பிள்ளைகளும், வேலைக்கு செல்கிற பெண்களும் கஷ்டங்கள் பட்டாலும் அவர்களை 'வாயை மூடு' என்ற ஒற்றை வார்த்தையால் குடும்பங்களில் அடக்கி விடுகின்றனர்.
ஏன்... எதற்காக?
இதனாலேயே பெண்கள் வாயை முடிக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. 'ரோட்டில் யாராவது ஆண்கள் கிண்டலடித்தாலோ அல்லது அவமானப்படுத்தினாலோ அவர்கள் முகத்தில் ஒரு குத்து விடு' என்று கூறி சிறுவயது முதல் பெண்களை வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்காமல் 'அவர்களிடம் எதுவும் பேச்சு வைத்துக் கொள்ளாதே. பேசாமல் வீட்டுக்கு வந்து விடு' என்று கூறியே வளர்க்கின்றனர். நாங்கள் ஏன் வாயை முடிக் கொண்டிருக்க வேண்டும்?
சாதனைகள்...
ஒரே ஆண்டில் 4 லட்சத்து 17 ஆயிரம் பள்ளிகளில் கழிவறை ஏற்படுத்தியிருக்கிறேன்- என்.சி.ஈ.ஆர்.டி புத்தகங்களை ஆன்லைனில் படிக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறேன். இது நாட்டிலேயே முதன்முறையாகும். இ- பாடசாலை - கேந்திர வித்யாலயாவில் மாணவர்கள் வருகை, கல்வி நிலை குறித்து பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அலெர்ட் வசதி ஏற்படுத்தியிருக்கிறேன்" என இவ்வாறு தனது சாதனைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
ஆன்ட்டி நேஷனல்...
அதுமட்டுமின்றி, தன்னை ஆன்ட்டி நேஷனல் எனக் குறிப்பிட்ட அசோக் சவுத்ரிக்கு பதிலடியாக, தனது இந்தக் கடிதத்தின் இறுதியில் இப்படிக்கு 'ஆன்டி நேஷனல்' என்றே கையொப்பமிட்டு தனது பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
வைரல்...
ஸ்மிருதி இரானியின் இந்த பதிவை இதுவரை சுமார் 12 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். சுமார் 5 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.