ராகுல் ஜி தைரியம் இருந்தால்... குஜராத் தேர்தலில் போட்டியிடுங்க... ஸ்மிரிதி ராணி ஒபன் சேலன்ஞ்
காந்திநகர்: ராகுல் காந்திக்கு குஜராத் மக்கள் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, தைரியமிருந்தால் அவர் குஜராத் தேர்தலில் போட்டியிடட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்,
குஜராத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல மாநிலத்திலுள்ள 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 231 தாலுகா பஞ்சாயத்துகளுக்குமான தேர்தல் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக பல்வேறு முக்கிய கட்சியினரும் குஜராத்தில் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக, குஜராத்தில் ஆளும்கட்சியாக பாஜக உள்ளதால், அக்கட்சி தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டீ கடைக்காரருடன் பிரச்சினை
மத்திய அமைச்சரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஸ்மிரிதி ராணி குஜராத்தில் தற்போது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மக்களிடையே பேசிய அவர், "குஜராத் மாநிலத்திலுள்ள சிறு தேயிலை வர்த்தகர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்குவேன் என ராகுல் காந்தி அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். முன்பு, காங்கிரஸ் கட்சிக்கு டீ கடைக்காரர்(பிரதமர் மோடி) ஒருவருடன் பிரச்சினை செய்தனர். இப்போது டீ குடிப்பவர்களிடமும் கூட அவர்கள் பிரச்னை செய்கின்றனர்.

தைரியம் இருந்தால் போட்டியிடட்டும்
தைரியம் இருந்தால் இங்கு ராகுல் காந்தி பிரச்சாரத்தை மேற்கொள்ளட்டும். நான் அவருக்குச் சவாலே விடுகிறேன், முடிந்தால், ராகுல் குஜராத் தேர்தலில் போட்டியிடட்டும். அப்படிப் போட்டியிட்டால் தான் இங்குள்ள மக்கள் மீது அவருக்கு இருக்கும் தவறான எண்ணங்கள் மாறும்" என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.

ராகுல் காந்தி
முன்னதாக, அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, குஜராத்திலுள்ள வணிகர்கள் கொள்ளை லாபம் அடையும் போது, இங்குள்ள தேயிலை விற்பனையாளர்களுக்குச் சொற்ப தொகையாக 167 ரூபாய் மட்டுமே தினசரி ஊதியமாக வழங்கப்படுகிறது என்றார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, குஜராத் வணிகர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, தேயிலை தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 365 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பட்டேல் சிலை
தொடர்ந்து ராகுல் காந்தியை கடுமையாகச் சாடிய ஸ்மிரிதி ராணி, "பிரதமர் நரேந்திர மோடியும், குஜராத் மக்களும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மிகப் பெரிய நினைவிடம் ஒன்றைக் கட்ட முடிவு செய்தனர். ஆனால், இத்திட்டத்தை ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும் முழுமையாக எதிர்த்தனர். இந்திய வரலாற்றிலிருந்து வல்லபாய் பட்டேலை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றர்.

வெறுப்பு போகவில்லை
குஜராத் மக்கள் இத்திட்டத்திற்கு அளித்த ஆதரவுக்குப் பின் ராகுல் காந்தி தனது எண்ணத்தை மாற்றிக்கொள்வார் என்று நினைத்தேன். ஆனால், குஜராத்திகள் மீதான வெறுப்பை அவர்களின் மனதிலிருந்து போகவில்லை. ராகுல் மற்றும் சோனியா காந்தி அறிவுறுத்தியபடி, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பட்டேலின் சிலையை அவமதித்து வருகிறது "என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications