பட்டப்படிப்பு குறித்து தவறான தகவல் ஸ்மிருதி இரானிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு
டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது பட்டப்படிப்பு குறித்து தவறான தகவல் அளித்தது பற்றி தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்யவும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஸ்மிருதி இரானி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கல்வித் தகுதி பற்றி தவறான தகவலை வேட்புமனுவில் குறிப்பிட்டதாகக் கூறி எழுத்தாளர் அஹமர் கான் என்பவர் டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. மனான் கூறுகையில், 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவில் ஸ்மிருதி இரானி தான் 1996ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. முடித்ததாக தெரிவித்துள்ளார்.(கரஸ்பான்டஸ் கோர்ஸ்).
ஆனால் 2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில் டெல்லி பல்கலைக்கழகத்தில்(கரஸ்பான்டஸ் கோர்ஸ்) பி.காம். படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது அசையா சொத்துக்கள் குறித்து வேட்புமனுக்களில் தவறான தகவல்களை அளித்துள்ளார் என்று தெரிவித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கூறுகையில், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி குறித்த வழக்குக்கு முகாந்திரம் இருப்பதால் விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்யலாம் என்று டெல்லி நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications