தேசப் பாதுகாப்பில் 'சமரசம்' செய்து கொண்ட சில முன்னாள் பிரதமர்கள்: மனோகர் பாரிக்கர் பேச்சால் சர்ச்சை!
மும்பை: நாட்டின் மிக முக்கியமான சொத்தான தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பையில் "விவேக்' என்ற ஹிந்தி வாரப் பத்திரிகையின் தேசப் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு இதழ் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியதாவது:

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் வந்த படகு தொடர்பான தகவல்களை வெளியிடுவதாக நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். ஆனால், அந்தத் தகவல்களை நான் வெளியிடப் போவதில்லை.
ஏனெனில், அவ்வாறு செய்தால் அது தகவல் அளித்தவர்கள் குறித்த ரகசியத்தைக் காக்கத் தவறியதாகி விடும்.
நாட்டின் மிக முக்கியமான சொத்து தேச பாதுகாப்பு. தேசப் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களை நாம் காக்க வேண்டியுள்ளது. துரதிருஷ்டவசமாக இத்தகைய ரகசியத் தகவல்களைக் காப்பாற்ற முன்னாள் பிரதமர்கள் சிலர் தவறி விட்டனர்.
எனினும் தங்கள் பெயர் வெளிவாராமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். இது வருத்தமளிக்கிறது. அவர்கள் யார் என்பதை நான் வெளியிட விரும்பவில்லை
பாகிஸ்தான் படகு தொடர்பாக தகவல்களை வெளியிட வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதுபோன்ற ஆபரேசன்கள் இனிநடத்தப்பட்டால் மீடியா கேமரா மேன்கள் மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் பேசினார்.
காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, என்ன மாதிரியான தகவல்களை எந்த பிரதமர் காக்கவில்லை என்பதை மனோகர் பாரிக்கர் பகிரங்கப்படுத்த வேண்டும்.
அப்படி தகவல்களை வெளியிடவில்லை எனில் மனோகர் பாரிக்கர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications