கட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தினர்? ஆக.7-ல் நேரில் ஆஜராக சோனியா, ராகுலுக்கு கோர்ட் உத்தரவு!!
டெல்லி: பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆகஸ்ட் 7-ந் தேதி நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜஹவர்லால் நேருவால் 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தி நேஷனல் ஹெரால்டு நாளேடு. இது 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த பத்திரிகையின் நட்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது.
இக் கடன்களை தீர்க்க முடியாமல் அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து கடனை அடைத்தனர்.
இதற்கு பிரதிபலனாக நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை இருவரும் அபகரித்துக் கொண்டனர் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் புகார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி கோமதி மனோசா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது. இதனால் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஆகஸ்ட் 7-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.