தென்மேற்கு பருவமழை தொடங்கியது... தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கத்தரியின் தாக்கம் சிறிது குறைந்து ஆங்காங்கே பரவலாக மழையும், மேகமூட்டத்துடன் கூடிய வானிலையும் காணப்பட்டது. இதனால் விரைவில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி நேற்று கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கவில்லை.
இந்நிலையில், நேற்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
எதிர்பார்ப்பு...
இன்னும் 24 மணிநேரத்தில் கேளராவில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இன்று (வெள்ளிக்கிழமை) பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
பருவமழை தொடக்கம்..
எந்த ஒரு பருவமழை தொடக்கம் என்றாலும் அநேக இடங்களில் பலத்த மழை தொடர்ந்து 2 நாட்கள் பெய்யும். அப்படி கேரளாவில் அநேக இடங்களில் பெய்யவில்லை.
தமிழகத்திற்கு மழை...
ஓரளவுக்கு சில இடங்களில் பெய்து இருக்கிறது. எனவே பருவமழை தொடங்கவில்லை. இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்.
மழை அளவு...
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், பூண்டியில் தலா 5 செ.மீ.மழை பெய்துள்ளது. சூளகிரி, ஈரோடு, கொளச்சல், சங்ககிரி, வாலாஜா தலா 2 செ.மீ.மழையும், கிருஷ்ணகிரி, கோபிச்செட்டிப்பாளையம், இரணியல், பவானிசாகர், வாணியம்பாடி, பாலக்கோடு, சத்யமங்கலம், பெரியார், குடியாத்தம் தலா 1 செ.மீ.மழையும் பெய்துள்ளது' என இவ்வாறு அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதிகபட்சமாக...
இந்நிலையில் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. முதல்நாளில் அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
கடந்தாண்டு நிலவரம்...
கேரளாவில் தொடங்கியுள்ள இந்த பருவமழை, படிப்படியாக நாடு முழுவதும் பெய்யத் தொடங்கும். கடந்த ஆண்டு 182 மாவட்டங்களில் சராசரியைவிட அதிக மழையும், 264 மாவட்டங்களில் சராசரி மழையும், 176 மாவட்டங்களில் குறைவான மழையும் பெய்தது.
சராசரி மழை...
இந்த ஆண்டு அனைத்து இடங்களிலும் சராசரியான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தென்மேற்கு பருவ மழையின்போது, தமிழகத்தின் வட மாவட்டங்களை விட மேற்கு மற்றும் தென் பகுதிகளுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
வானிலை மையம் தகவல்...
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..