கிரானைட் குவாரி ஓனரிடம் 17 லட்சம் லஞ்சம் வாங்கி மோசடி செய்த எஸ்.பி. சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் 17 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியும் கூட கேட்ட வேலையை செய்து கொடுக்காமல் மோசடி செய்த எஸ்.பி. ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்தவர் அஜித். கல் குவாரி உரிமையாளர். சமீபத்தில் இவரது கல் குவாரியை மூட பத்தனம்திட்டா போலீஸ் எஸ்.பி. ராகுல் ஆர்.நாயர் உத்தரவிட்டார்.
இதனால் போலீஸ் எஸ்.பியை சந்தித்த அஜித் தனது கல் குவாரியை திறக்க அனுமதி வழங்கும்படி கேட்டார். அதற்கு எஸ்.பி. ரூபாய் 20 லட்சம் லஞ்சம் வழங்கும்படி முதலில் கூறினார். பிறகு ரூபாய் 17 லட்சத்திற்கு சம்மதித்ததால் அந்த பணத்தை அஜித்தும் வழங்கினார்.ஆனால் அஜித்தின் மேலும் ஒரு கல்குவாரியை மூட போலீஸ் எஸ்.பி. உத்தரவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித் இதுபற்றி கேரள டி.ஜி.பி.யிடம் புகார் செய்தார். அவரது உத்தரவுப்படி நடந்த விசாரணையில் ராகுல் ஆர்.நாயர் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரிய வந்ததால் கேரள அரசுக்கு இதுபற்றி அறிக்கை அனுப்பப்பட்டது.
முதல் கட்டமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையிலும் எஸ்.பி. லஞ்சம் வாங்கியது நிரூபணம் ஆனதால் அவரை சஸ்பெண்ட் செய்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டார்.