2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு- 38 பேருக்கு தூக்கு-ராஜீவ் கொலை வழக்குக்கு பின் அதிரடி தீர்ப்பு
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் நாட்டில் முதல் முறையாக மிக அதிக எண்ணிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு ஜூலை 26-ல் அகமதாபாத் நகரில் 70 நிமிட இடைவெளிகளில் 22 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் மொத்தம் 56 பேர் உயிரிழந்தனர். மேலும் 240 பேர் படுகாயமடைந்தனர்.

77 பேர் கைது
இந்த தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 77 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அகமதாபாத், போபால், பெங்களூரு உள்ளிட்ட பல சிறைகளில் உள்ளனர். இவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைகள் நடைபெற்றன.

49 பேர் குற்றவாளிகள்
இவ்வழக்கில் கடந்த 8-ம் தேதி தீர்ப்பளித்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம், 49 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. மேலும் இவ்வழக்கில் இருந்து 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 49 பேருக்கான தண்டனை விவரங்களை சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

38 பேருக்கு தூக்கு- 11 பேருக்கு ஆயுள்
குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

ராஜீவ்கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு
முன்னதாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 1998 ஜனவரி 28-ந் தேதி சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி தடா நீதிமன்ற நீதிபதி நவநீதன் 26 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார். பின்னர் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது. இந்த 7 பேரின் தூக்கும் ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications