ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் சர்க்கரை, இதய நோயாளிகளுக்கு 'ஸ்பெஷல்' உணவு
சன்டிகர்: ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணம் செய்யும் சர்க்கரை வியாதி மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்கு என்று ஸ்பெஷல் உணவு செய்து கொடுக்கப்படும்.
இமாச்சல பிரதேச மாநில ராஜ்யசபா உறுப்பினர் ஜகத் பிரகாஷ் நட்டா ரயில்களில் பயணம் செய்யும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட வேண்டும் என்று கோரி ரயில்வே அமைச்சருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதினார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவிலும் அவர் கேள்வி எழுப்பினார்.
ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணிக்கும் நோயாளிகளுக்கு சிறப்பு உணவு வழங்குவது குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று அவருக்கு பதில் அளிக்கப்பட்டது.
ஜெயின் உணவும் கூட
பயணிகள் கேட்டுக் கொண்டால் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் ஜெயின் உணவு கூட தயாரித்து வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு உணவு
ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணம் செய்யும் சர்க்கரை வியாதி மற்றும் இதய நோய் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்கு என்று பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று ரயில்வேயின் சுகாதாரத்துறை எக்சிகியூட்டிவ் டைரக்டர் எஸ்.கே. சபர்வால் ஜகத்திடம் தெரிவித்துள்ளார்.
வெண்ணெய், ஊறுகாய்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகளுக்கு ரயில்களில் வெண்ணெய், சர்க்கரை, ஜாம், ஊறுகாய் வழங்குகிறார்கள். அவற்றை எல்லாம் அவர்கள் சாப்பிடக் கூடாது என்பதால் அவை வீணாகிவிடுகின்றன என்றார் ஜகத்.
இனி உணவு வீணாகாது
இனி ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் நோயாளிகளுக்கு என்று பிரத்யேகமாக உணவு வழங்கப்படும் என்பதால் எந்த உணவும் வீணாகாது என்று ஜகத் தெரிவித்தார்.