சட்ட விரோத குவாரி: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்த ரெட்டி மீண்டும் கைது
பெங்களூர்: சட்டவிரோத குவாரி வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி (பாஜக) கர்நாடக லோக்ஆயுக்தாவின் சிறப்பு விசாரணை குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில், எடியூரப்பா தலைமையிலான பாஜக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜனார்த்தனரெட்டி. பெல்லாரி மற்றும் பல இடங்களில் சட்ட விரோத குவாரித்தொழிலில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த சிபிஐ ரெட்டியை கைது செய்தது. ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரெட்டி, ஒவ்வொரு வழக்காக ஜாமீன் வாங்கிக்கொண்டிருந்தார். 2 வருடங்கள் சிறையில் அடைபட்டிருந்த ரெட்டி, 13 வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இந்நிலையில், கர்நாடக லோக்ஆயுக்தா சிறப்பு விசாரணை குழு அவர் மீதான தாது மோசடி வழக்கு ஒன்றை விசாரித்து வந்தது. அந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, ரெட்டிக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.
இன்று காலை முதல் பெங்களூரில் உள்ள லோக்ஆயுக்தா ஆபீசில், ரெட்டி விளக்கம் கொடுத்தார். விளக்கம் திருப்தியளிக்காத நிலையில், அவரை கைது செய்துள்ளது லோக்ஆயுக்தா. இதனால் மீண்டும் சிறையில் அடைபட்டுள்ளார், செல்வந்தரான, ஜனார்த்தனரெட்டி.