ஈழத் தமிழர்களை சிங்களம் பேச சொன்ன இந்திய துணைத் தூதர்- வெளியுறவுத் துறை விளக்கம்
டெல்லி: இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் ஈழத் தமிழர்களை சிங்கள மொழி பேச வேண்டும் என்று இந்திய துணைத் தூதர் மூர்த்தி வலியுறுத்தியது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழர்களிடம்மக்களிடம், இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள், இந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக் கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார்.
டி. ராஜா கோரிக்கை
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்னை. அதில் தூதரக அதிகாரிகள் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
வெளியுறவுத் துறை விளக்கம்
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேட்டதற்கு, இந்த பிரச்சனை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்றார்.
நிராகரித்த ராஜபக்சே
மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தம் அமலாக்கம் செய்வது சாத்தியமற்றது என்று கூறியிருந்தார்.
இந்தியாவின் நிலைப்பாடு இதுவே
இது குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை அரசிடம் அதையே மத்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தும்.
நம்பிக்கையோடு இருக்கிறோம்
இந்த விஷயத்தில் இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை. எனவே, இலங்கை அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றார் சையது அக்பருதீன்.