புதிய சரித்திரம் படைத்த இஸ்ரோ.. முதல்முறையாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி ராக்கெட்!
ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்பு உள்ளிட்ட செயற்கைகோள்களுடன் சிறிய வகை ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி இன்று விண்ணில் ஏவப்பட்டது.
Recommended Video
தகவல்தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!
எஸ்எஸ்எல்வி
இந்த நிலையில், சா்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது.
கவுண்டவுன் தொடக்கம்
அந்த வகையில் 120 டன் எடை அதிகபட்சம் புதிய வகை ராக்கெட், எஸ்எஸ்எல்வி டி-1 இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இரு செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்கான 6 மணிநேர கவுன்ட்டவுன் அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கியது.
நவீன கேமராக்கள்
145 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோள் கடலோர நிலப் பயன்பாடு, ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டர்அளவுக்கு துல்லியமாகப் படம் பிடிக்க முடியும்.
ஆசாதிசாட்
இதோடு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் எனும் கல்விசார் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் மூலம் உருவாக்கப்பட்டது.