ஸ்டாலினுக்கும் மம்தாவுக்கும் வாய்ப்பு இருக்கு.. கெஜ்ரிவாலுக்கு சான்ஸ் இல்லை: சொல்வது பாஜக எம்.பி.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ள நிலையில், அக்கட்சி தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கட்சியாக ஆம் ஆத்மி இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெறுவது என்பது மிகப்பெரிய வெற்றி என்றும், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் மேலும் சிதறுவதை இது காட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் முரளிதர் ராவ் தெரிவிக்கையில், "காங்கிரஸ் ஒரு காலத்தில் எப்படி நிலையான தேசிய கட்சியாக திகழ்ந்ததோ, அதேபோல் அடுத்த 20 ஆண்டுகளில் பாஜக திகழும். பாஜகவுக்கு எதிரான இடம் காலியாகி வருகிறது. காங்கிரஸ் இருந்த அந்த இடத்தை ஆம் ஆத்மி கட்சி நிரப்ப வாய்ப்பு உள்ளது. பாஜகவுக்கு மாற்று சக்தியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுக்க அக்கட்சி மக்களவைத் தேர்தலில் குறைந்தது 100 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும்." என்றார்.
தேர்தல் தோல்வி குறித்து ஆங்கில நாளேடுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர்கள், "ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரங்களும் திட்டங்களும் பாஜகவின் பாணியை ஒத்து இருக்கிறது. கட்சியை வளர்க்கும் விதமும் அதைப்போன்றே உள்ளது." எனக் கூறியுள்ளனர்.
பாஜகவை நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி மக்கள் நலப்பணிகளை முன் வைத்து அரசியல் செய்து வருகிறது. அதன் சக்திவாய்ந்த தலைவராக அர்விந்த் கெஜ்ரிவால் திகழ்ந்து வருகிறார். ஏழை எளிய மக்களை அக்கட்சி கவர்ந்து வருகிறது. எளிய மக்கள் அர்விந்த் கெஜ்ரிவால் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நீண்ட கால செய்திட்டத்தின்படி பார்த்தால் இது எங்களுக்கு நல்ல செய்தி கிடையாது. ஆனால், அதற்கு இடையில் என்ன நடக்கும் என்பதை எங்களால் கணிக்க முடியும்." என்றார்.
"பஞ்சாப் தேர்தலில் கிடைத்த வெற்றியால் அர்விந்த் கெஜ்ரிவால், அடுத்து நடைபெற இருக்கும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்கு தயாராக வாய்ப்பு உள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சி அதிகாரத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்திலும் கட்சியை வளர்க்க முயற்சிக்கும்." எனக் கூறுகிறார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
பஞ்சாப் தேர்தல்: 92 தொகுதிகளை அள்ளிய ஆம்ஆத்மி..கெஜ்ரிவால் மாடலுக்கு கிடைத்த வெற்றி என கொண்டாட்டம்..!
ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அனில் ஜெயின், "ஆம் ஆத்மி வளர்ச்சி அரசியல் மூலம் மக்களை கவர முயற்சிக்கலாம். ஆனால், பாஜக அதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டது. நாங்கள் பயனாளிகளை ஒன்று திரட்டி கட்சி மீது நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளோம். எனவே ஆம் ஆத்மியால் பாஜகவுக்கு ஆபத்து இல்லை." என்றார்.
மம்தா பானர்ஜி அல்லது மு.க.ஸ்டாலின் தேசிய தலைவராக உருவெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ள அனில் ஜெயின், "மேற்கு வங்கத்தில் 41 தொகுதிகளும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன. ஆனால், பஞ்சாபையும் டெல்லியையும் சேர்த்தால்கூட 20 தொகுதிகள்தான் இருக்கும். எல்லாம் கணக்கு தான். அதிகபட்சம் முன்னாள் பிரதமர் தேவகவுடா போன்றோ ஐ.கே.குஜ்ரால் போன்றோ இருக்கலாம்." என்றார்.