‘சட்டீஸ்கர் கருத்தடை முகாம்’ பெண்கள் மரணத்தில் போலி மருந்துகள், லஞ்சம் ... ராகுல் குற்றச்சாட்டு
பிலாஸ்பூர் : சட்டீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை முகாமில் கலந்து கொண்ட 15 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் லஞ்சம் உள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் மாநில அரசின் சுகாதாரத் துறையும், தனியார் மருத்துவமனையும் இணைந்து பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தியது. இதில் கலந்து கொண்டபெண்களில் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர்.
ஆனால், அவர்களில் 15 பெண்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஐம்பதிற்கும் அதிகமான பெண்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.
எலி விஷம்...
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த மரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், சிகிச்சை பெற்ற பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்தில் எலி விஷம் கலக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
ராகுல் காந்தி...
இந்நிலையில், நேற்று உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராய்ப்பூர் வந்தார். பின்னர் அங்கிருந்து தனியார் வாகனம் மூலம் பிலாஸ்பூர் வழியாக உயிரிழந்த பெண்களின் சொந்த ஊரான அம்சேனா கிராமத்திற்கு சென்றார்.
நேரில் ஆறுதல்...
அங்கு, பலியான பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராகுல், பிலாஸ்பூர் நகர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களையும் நேரில் சந்தித்தார்.
ஊழல்...
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ‘கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு அலட்சியம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இதற்கு லஞ்சமும் ஒரு முக்கிய காரணம். போலியான மருந்துகள் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது'' என குற்றம்சாட்டியுள்ளார்.