சீருடை அணியாமல் ஐயப்ப மாலை அணிந்து வந்த மாணவனை அடித்த ஆசிரியை - ஆந்திராவில் பரபரப்பு
ஹைதராபாத்: சீருடை அணியாமல் கருப்பு ஆடை அணிந்து, ஐயப்ப மாலை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவனை ஆசிரியை அடித்ததைக் கண்டித்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர், நேற்று ஐயப்ப மாலை அணிந்து கருப்பு உடை அணிந்து பள்ளிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பள்ளிச் சீருடை அணியாமல் பள்ளிக்கு வரக்கூடாது என மாணவனைக் கண்டித்துள்ளார் வகுப்பு ஆசிரியை.
வீட்டிற்கு சென்று சீருடை அணிந்து வரும்படி ஆசிரியை வற்புறுத்தியதாகவும் அதற்கு மாணவர் மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவரின் ஐயப்ப மாலையை அறுத்து வீசியதாகவும், பின்னர் பிரம்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், அழுது கொண்டே வீட்டுக்குச் சென்ற மாணவர் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள், இந்து சமய அமைப்பினர் மற்றும் ஐயப்ப பக்தர்களுடன் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
மாலை அணிந்திருந்த மாணவனை அடித்ததாலும், இந்துக்கள் மனம் புண் படும்படி நடந்து கொண்டதாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியை மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது.
எனவே, ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகளை உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.