இலவச சிகிச்சை கொடுத்தால் கூட அரசு மருத்துவமனைக்கு போவாரில்லை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியர்கள் 75 சதவீதம் பேர் நோய் பாதிப்பு காலத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையையே அணுகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: இந்திய மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் நோயினால் பாதிக்கப்படும் நேரங்களில் சிகிச்சை எடுப்பதற்காக தனியார் மருத்துவமனைகளையே அணுகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி நாட்டில் நான்கில் மூன்று சதவீதம் மக்கள் நோயினால் பாதிக்கப்படும் வேளையில் தனியார் மருத்துவர்களையே அணுகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுகாதாரம் நோய்தன்மை 2004 - 2014 என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் வாழும் 75 சதவீத புற நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாகக் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உள்நோயாளிகள் பிரிவில் 55 சதவீதம் மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் மக்களின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணத் தொகையும் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலைக்கு காரணம் புறநோயாளிகளாக செல்லும் மக்களுக்கு தேவையான நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உளளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு சில இடங்களைத் தவிர எந்நேரமும் புறநோயாளிகள் சிகிச்சை பெறக்கூடிய நிலை இருக்கிறது. இந்த வசதி அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டால் மக்கள் அரசு மருத்துவமகைளை நாடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.