சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடை தமிழருக்கு எதிரானதாம்... 'பொங்கும்' சு.சுவாமி
டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டது 'தமிழருக்கு' எதிரானது என பொங்கியிருக்கிறார் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதித்துள்ள 2 ஆண்டு தடையை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் நீதிபதி ஆர்.எம். லோதா கமிட்டியானது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகாலம் தடை விதித்தது.
இது குறித்து பா.ஜ.க.வின் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
லோதாவுக்கு புகழாரம்
ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இருவருக்கு தண்டனை விதித்துள்ளதற்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீதிபதி லோதாவுக்கு புகழாரம் சூட்டப்படுகிறது.
மயிலாப்பூர் தமிழன்
இருப்பினும் சென்னை மயிலாப்பூரில் பிறந்த தமிழன் என்ற முறையிலும் மதுரை லோக்சபா தொகுதி பிரதிநிதியாக இருந்தேன் என்கிற வகையிலும் சென்னை அணியின் இரு நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட தடை என்பது தமிழருக்கு எதிரானதாக கருதுகிறேன்.
துபாய் கேங்கை தடுத்தவர்..
ஐ.சி.சி. தலைவர் என்கிற உயர் பதவியில் இருப்பவர் தமிழரான சீனிவாசன். கிரிக்கெட் சூதாட்டங்களில் மும்பை மற்றும் தமிழகப் பகுதிகளில் இயங்கி வந்த "துபாய் கேங்" எந்த வகையிலும் தலையெடுக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்த அவர் மீது தமிழர்கள் அனைவரும் நல்ல மதிப்பு வைத்துள்ளனர்.
பொதுநலன் மனு
ஆகையால் தேசியவாதம் பேசும் தமிழர்களின் சார்பில் நீதிபதி லோதா குழுவின் முன்பு சென்னை அணிக்கு விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்ய உள்ளேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.