சுனந்தா மரணம்: நீடிக்கும் மர்மம்... தொடரும் குழப்பம்.... விடையில்லாத கேள்விகள்...
டெல்லி: கடந்த வெள்ளியன்று மர்மமான முறையில் உயிரிழந்த சுனந்தாவின் மரணம் பல்வேறு குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
தனது கணவரும் மத்திய அமைச்சருமான சசி தரூருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹருக்கும் இடையே தொடர்பிருப்பதாக டுவிட்டர் வாயிலாக குற்றம் சாட்டினார் சுனந்தா. அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைப்பதற்குள்ளாகவே, கடந்த வெள்ளியன்று மர்மமான முறையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார் சுனந்தா.
சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது மரணம் இயற்கையானது அல்ல என தெரிவித்துள்ளனர். மேலும், சுனந்தாவின் மரணம் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. மேலும், அவரது மரணம் பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. அவை குறித்தான ஒரு தொகுப்பு...
வாக்குவாதம்....
கடந்த 15ம் தேதி விமான பயணத்தின் போது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் தரூர் - சுனந்தா தம்பதியினர். இதனை விமானத்தில் இருந்த அமைச்சர் உட்பட விமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல் வாசம்....
அதனைத் தொடர்ந்து வீட்டிற்குச் செல்லாமல் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார் சுனந்தா. ஹோட்டலுக்கு அழுது கொண்டே வந்த அவரை ஹோட்டல் ஊழியர்கள் சமாதானம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்த சண்டை....
சுனந்தா ஹோட்டலுக்கு குடியேறிய அடுத்த நாளே சசி அங்கு வந்துள்ளார். அன்றிரவு முழுவதும் இருவரும் சண்டை போட்டதாக ஹோட்டல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
தோழியுடன் பேச்சு...
இந்நிலையில் கடந்த வெள்ளியன்ரு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார் சுனந்தா. மரணத்திற்கு முன் அவர் தனது தோழியுடன் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன அழுத்த மாத்திரைகள்...
சுனந்தாவின் சடலம் மீட்கப்பட்ட ஹோட்டல் அறையில், மன அழுத்தத்திற்கான தூக்க மாத்திரை பட்டைகள் மீடகப் பட்டதாக போலீசாரின் அறிக்கைத் தெரிவிக்கிறது. இதன் மூலம் அளவுக்கதிகமான மன உளைச்சல் மாத்திரைகளே சுனந்தாவின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தற்கொலைக் கடிதம்...
அதே சமயம், சுனந்தா தற்கொலை தான் செய்து கொண்டார் என்றால், தனது மனநிலை குறித்து ஏதேனும் கடிதம் எழுதி வைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் சிக்கவில்லை எனக் கூறப் பட்டுள்ளது.
கடைசி டுவிட்டர் பதிவு....
ஆனால், தனது கடைசி டுவிட்டர் தகவல்களில் சுனந்தா அதிக மன உளைச்சலில் இருந்தது வெளிப்படுகிறது. தான் சிரித்துக் கொண்டே விடை பெறுவதாக கடைசி பதிவு வெளியிட்டுள்ளார் சுனந்தா.
மாரடைப்பு...
மர்ம நோயால் பாதிக்கப் பட்டிருந்த சுனந்தா, அதற்கான மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் அதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது.
நீடித்த பிரச்சினை...
சுனந்தா ஹோட்டல் அறைக்கு வந்த பின், ஒருநாள் கழித்தே சசி அக்கு வந்துள்ளார். அது ஏன்? அப்படியென்றால் அதற்கு முந்தினம் அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை நம்பிக்கையில்லாததா என்ற வினா எழுகிறது.
கொலை முயற்சியா...?
சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடலில் காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். அது உண்மையென்றால், அக்காயங்களை ஏற்படுத்திய நபர் யார்? மரணத்திற்கு முன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள யாருடனோ போராடியுள்ளார் சுனந்தா என எடுத்துக் கொள்ளலாமா...
எங்கே போனார்கள் பணியாட்கள்....
சுனந்தாவின் சடலம் மீட்கப் பட்ட போது, அவர் மரணமடைந்து 4 மணி நேரங்களுக்கு மேலாகி இருக்கலாம் எனச் சொல்லப் படுகிறது. அப்படியானால், அவ்வளவு நேரம் எப்படி யாரும் கவனிக்காமல் இருந்தார்கள்.
மர்ம நபர்கள்?
சம்பவ தினத்தன்று சுனந்தாவின் அறைக்கு வேறு யாரேனும் வந்தார்களா? என்பது உட்பட பல கேள்விகளுக்கு விடை தேடப் பட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் தெளிவான பதில் விரைவில் போலீஸ் விசாரணையில் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.