மாணவர்கள் இல்லை.. தெலுங்கானாவின் 400 பள்ளிகள் “காலி” - அதிர்ச்சியளிக்கும் வழக்கு!
டெல்லி: தெலுங்கானாவில் 400க்கு மேற்பட்ட பள்ளிகள் 1 மாணவர் கூட இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த மாநிலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி காலி இடம் அதிகமாக உள்ளது.
7 ஆயிரத்து 974 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக ராஜு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
கல்வித்துறை மனு:
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, சிவாகீர்த்திசிங் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தெலுங்கானா மாநில கல்வித்துறை சிறப்பு தலைமை செயலாளர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
மாணவர்கள் ரொம்பக் கம்மி:
அதில், தெலுங்கானா மாநிலத்தில் ஆசிரியர்கள் பணிகள் நிரப்பப்படாமல் இருப்பது உண்மை தான். ஆனால் பல பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது இல்லை. இந்த மாநிலத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 139 அரசு ஆரம்ப பள்ளிகள் உள்ளன.
400 பள்ளிகள் காலி:
398 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. 980 பள்ளிகளில் 1ல் இருந்து 10 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். 2 ஆயிரத்து 33 பள்ளிகளில் 11ல் இருந்து 20 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். இதனால் ஆசிரியர்கள் தேவைப்படவில்லை. எனவே அவர்கள் பணியிடம் நிரப்பப்படவில்லை என்று கூறியிருந்தார்.
வேலைத் தேடி நகரங்களுக்கு:
மேலும் அவர் கூறும்போது, கிராமங்களில் உள்ள மக்கள் வேலை தேடி நகரங்களுக்கு சென்றுவிட்டார்கள். எனவே பள்ளிகளில் சேர மாணவர்கள் இல்லை.
தனியார் பள்ளிகளுக்கு முதலிடம்:
மேலும், தனியார் பள்ளிகள் வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாணவர்களுக்கு செய்து கொடுக்கின்றன. எனவே தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று கூறியிருந்தார்.
ஆய்வு நடத்த உத்தரவு:
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளில் நிலவும் நிலைமை குறித்து ஆய்வு நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளனர்.