டெல்லி இஸ்ரேலிய தூதரகத்திற்குள் பார்சலுடன் நுழைய முயன்ற சந்தேகத்திற்கிடமான நபர்
டெல்லி: டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்குள் கையில் ஒரு பார்சலுடன் நுழைய முயன்ற சந்தேகத்திற்கிடமான நபர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள தாய்பெய் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த கடிதம் வந்த சில மணிநேரத்தில் டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு 35 வயது நபர் ஒருவர் கையில் பார்சலுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்தார்.
தூதரகத்திற்குள் நுழைய முயன்ற அவர் அருகில் போலீசார் வந்தவுடன் ஓடத் துவங்கினார். உடனே போலீஸ் அதிகாரிகளும், தூதரக பாதுகாவலர்களும் அவரை துரத்திப் பிடித்தனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்ட பிறகு அவர் கையில் இருந்த பார்சலை பிரித்தபோது அதில் வெறும் பிள்ளையார் சிலை தான் இருந்தது.
ஹரியானாவைச் சேர்ந்த மோமின் என்ற அந்த நபர் ஓடுகையில் காயம் அடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார்.
கலாச்சார மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததற்கும், இதற்கும் தொடர்புள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு இஸ்ரேலிய தூதரகத்திற்கு சொந்தமான காரில் குண்டு வெடித்ததில் தூதரக அதிகாரியின் மனைவி காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications