தூய்மை இந்தியா திட்டத்திற்காக பெட்ரோல், டீசல் மீது மேலும் வரி விதிக்கும் மத்திய அரசு
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிதி திரட்ட மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்க திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். தூய்மை இந்தியா திட்டத்தின்படி 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதிக்குள் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.2.23 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது.
அந்த நிதியை திரட்ட பல்வேறு வழிகளில் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு ஆய்வு செய்து வருகிறது. இந்த திட்டத்திற்கு நிதி திரட்ட பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 2015-2016ம் ஆண்டு பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
எப்படி எல்லாம் நிதி திரட்டலாம் என்பது குறித்து நிதி அயோக் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்திற்காக இதுவரை திரட்டப்பட்டுள்ள நிதி போதவில்லை என்று கூடுதல் வரி விதிப்பில் இறங்க உள்ளது மத்திய அரசு. இது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின்படி 1.04 கோடி வீட்டு கழிப்பறைகள் கட்டுவது, 2.52 லட்சம் பொது கழிப்பறைகள் கட்டுவது, 30 கோடி நகர்ப்புற மக்களுக்கு திடக்கழிவு மேலாண்மையுடன் கூடிய 2.54 லட்சம் பொது கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலும் மத்திய அரசின் கலால் வரியால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்கின்றன எதிர்க்கட்சிகள்.
இந்த சூழலில் புதிதாக பெட்ரோல், டீசல் மீது வரி விதித்தால் சரக்கு போக்குரவரத்து கட்டணமும், விலைவாசியும் உயரக்கூடும். வரி விதிப்பு தவிர தூய்மை இந்தியா என்ற பெயரில் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்ட உள்ளது மத்திய அரசு. இந்த பத்திரங்கள் வரி விலக்கு சலுகையுடன் நீண்ட கால முதலீடு கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை 12.36 சதவீதம் இருந்த சேவை வரி ஜூன் 1ம் தேதி 14 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அத்துடன் தூய்மை இந்தியா வரியும் சேர்க்கப்பட்டு தற்போது சேவை வரி 14.5 சதவீதமாக உள்ளது. கூடுதல் வரி தூய்மை இந்தியா திட்டத்திற்காக செலவு செய்யப்படும் என்றது மத்திய அரசு. இந்நிலையில் மேலும் வரி விதிக்க திட்டமிடுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தால் இந்தியா தூய்மையானதா என்றால் இல்லை என்பது தான் பதில். ஆனால் வரி மேல் வரி மட்டும் போடுகிறார்கள் என்று மக்கள் புலம்புகிறார்கள்.