கோடையிலும் தீவிரமாகும் பன்றிக்காய்ச்சல்: பலி எண்ணிக்கை 1809 ஆக உயர்வு
டெல்லி: நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 42 பேர் மரணமடைந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 1,809 ஆக உயர்ந்துள்ளது. 31,000 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை காலம் தொடங்கியும் பன்றிக்காய்ச்சலின் தீவிரம் குறையாத காரணத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
எச்1என்1 என்ற வைரஸால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அசுர வேகத்தில் பரவி வருகிறது.
நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 387 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 378 பேரும், மராட்டியத்தில் 293 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 239 பேரும் பலியாகியுள்ளனர்.தெலுங்கானாவில் 72, கர்நாடகாவில் 71, பஞ்சாப்பில் 51, அரியானாவில் 45, உத்தரப்பிரதேசத்தில் 35, ஆந்திராவில் 20, மேற்கு வங்காளத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளனர்.
இமாச்சலபிரதேசத்தில் 18 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 16 பேரும், சத்தீஸ்கரில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், டெல்லி மற்றும் கேரளாவில் தலா 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 30,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?
வரும்முன் காக்கலாம்
தொண்டையில் தொற்று, வலி மற்றும் கரகரப்பு ஆரம்பிக்கும்போதே, முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருந்துக் கடையில், தாளிசாதி வடகம் என்ற மருந்து கிடைக்கும். இதை வாயில் போட்டு, உமிழ்நீருடன் மென்று, தொண்டையில் படும்படி விழுங்கினால், தொண்டைப் பாதிப்பு குறையும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
சூடாக சாப்பிடுங்க
வறுத்த அரிசி அல்லது வறுத்த நொய்யில் கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது.
வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம்.
சுடு சோறு சுண்டை வற்றல்
குழைய வடித்த சுடு சோற்றில், சுண்டை வற்றல் பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கும் இந்தப் பொடியைத் தொட்டுக்கொள்ளலாம். சுண்டை வற்றலைக் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.
அன்னாசி பழம்
அன்னாசிப் பழம் மிகவும் நல்லது. உணவில் சேர்க்கலாம். பன்றிக் காய்ச்சலுக்கு அரசு வழங்கும் ‘டேமிஃப்ளூ' மாத்திரைகளில் அன்னாசி கலந்துள்ளது. பால், தயிர் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மோர் குடிக்கலாம் என்பதும் சித்தமருத்துவர்களின் அறிவுரையாகும்.