செஞ்சுட்டோம்ல... கேரளாவை பின்னுக்கு தள்ளி சுற்றுலாவில் முதலிடம் பிடித்தது தமிழகம்
டெல்லி : தேசிய அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையில் மற்ற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் தமிழகத்திற்கு 46 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளபர்.
சர்வதேச அளவில் மக்கள் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. எனவே, இதன்பால் ஈர்க்கப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வந்து செல்கின்றன.
கேரளா, கோவா போன்றவை சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலாத் தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், இவைகளை பின்னுக்குத் தள்ளி கடந்தாண்டு அதிக சுற்றுலாப் பயணிகளை தன்பக்கம் ஈர்த்து சாதனை புரிந்துள்ளது தமிழ்நாடு.
தேசிய அளவில்...
கடந்த 2014ம் ஆண்டு தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 2.25 கோடி ஆகும். இது கடந்த 2013ம் ஆண்டு 1.99 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முதலிடம்...
கடந்தாண்டு தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 46 லட்சம் ஆகும். தமிழகத்திற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு கடந்தாண்டு 43 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
தலைநகர் டெல்லி...
இந்தப் பட்டியலில் உத்திரப்பிரதேசத்திற்கு 29 லட்சம் பேரும், டெல்லிக்கு 23லட்சம் பேரும், ராஜஸ்தானிற்கு 15 லட்சம் பேரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
7ம் இடத்தில் கோவா...
சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலாத் தலமாக அறியப்பட்ட கேரளாவிற்கு கடந்த ஆண்டு 9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே வந்து சென்றுள்ளனர். இதனால், இந்தப் பட்டியலில் கேரளாவிற்கு ஏழாம் இடமே கிடைத்துள்ளது.
இது தான் காரணம்...
தமிழகம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். எனவே, அவர்களின் வருகையாலேயே கடந்தாண்டு இம்மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக சுற்றுலாத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு சுற்றுலாவிலும்...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்நாட்டு சுற்றுலாவிலும் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு தமிழகத்திற்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32.7 கோடி ஆகும்.
கர்நாடகம்...
உள்நாட்டு சுற்றுலாவில் 18.2 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகையுடன் உத்திரப்பிரதேசம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களை கர்நாடகாவும், மகாராஷ்டிராவும் பிடித்துள்ளன. இங்கு முறையே 11.8 கோடி மற்றும் 9 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
செல்வாக்கை இழக்கும் கோவா...
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்த கோவா, சமீப ஆண்டுகளாக தனது செல்வாக்கை இழந்து வருகிறது. ஆனபோதும் 2013ம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு அங்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
பயணிகளின் எண்ணிக்கை கூடுதல்...
கடந்த 2013ம் ஆண்டு இங்கு 4.9 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். ஆனால், கடந்தாண்டு இது 5.1 லட்சமாக உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதும் தனது வசீகரத்தை கோவா இழந்து வருவதாக சுற்றுலா நிபுணர்கள் கூறுகின்றனர்.
சட்ட-ஒழுங்கு பிரச்சினை...
கடற்கரை மாநிலமான கோவாவில் ரஷ்ய பொருளாதார வீழ்ச்சி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்ற காரணங்களால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக அவர்கள் காரணம் கூறுகின்றனர்.