போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். குடியரசு தலைவருடனான இந்த சந்திப்பின் போது தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் இடம்பெற்றிருந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அரசியல் பிரமுகர்கள் பலர் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, ஓபிஎஸ் அணி சார்பில் மைத்ரேயன் எம்.பி. தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் சோம்நாத் பாரதி ஆகியோர் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை சந்தித்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன், தமிழக விவசாய பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். அப்போது கடன் தள்ளுபடி மற்றும் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கை மனுவை குடியரசு தலைவரிடம் அவர்கள் அளித்தனர். முன்னதாக விவசாய குழு பிரதிநிதிகள் இன்று, திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் இணைந்து அருண் ஜேட்லியை சந்தித்தனர்.