வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை... தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
அஹமதாபாத்: வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். வாக்குப்பதிவு எந்திரம் குறித்த அனைத்து விதமான கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி பேசியுள்ளார்.
பத்திரிக்கையாளர்களிடம் அவர் ''குஜராத்தின் தலைமை தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. எல்லா விதமான ஏற்பாடுகளும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு சரியாக நடந்து வருகிறது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தில் ''வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான முறைகேடும் செய்ய முடியாது. வாக்குப்பதிவு எந்திரத்தை யாரும் சேதப்படுத்த முடியாது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''தேர்தல் நடந்த எல்லா இடத்திலும் 'விவிபிஏடி' எனப்படும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களே சரிபார்த்துக் கொள்ள முடியும். எனவே இதில் எந்த விதமான முறைகேடும் நடக்காது. இது குறித்து ஏற்கனவே பல முறை விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது'' என்றார்.