சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட் மீது ரூ1.51 கோடி மோசடி வழக்கு பதிவு செய்தது குஜராத் அரசு!
2002ஆம் ஆண்டு குஜராத்தில் வன்முறைகள் நிகழ்ந்த போது குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி எஹ்சான் ஜாப்ரி உட்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையில் குஜராத் முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்திருந்தது.
ஆனால் கொல்லப்பட்ட எஹ்சான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை கடந்த 26-ந் தேதி அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த குல்பர்க்கா சொசைட்டி வழக்கை முன்னின்று நடத்தியவர் சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்.
மேலும் குஜராத் படுகொலைகள் தொடர்பாக அம்மாநில அரசுக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டங்களை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருபவர் தீஸ்டா செதல்வாட். இந்நிலையில் திடீரென குல்பர்க் சொசைட்டி பகுதியைச் சேர்ந்த 12 குடியிருப்புவாசிகள் தீஸ்டா செதல்வாட் மீது மோசடி புகார் கொடுத்திருப்பதாகக் கூறி குஜராத் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குல்பர்க் படுகொலையைத் தொடர்ந்து வீடுகள் கட்டித்தரவும், பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி செய்யவும் குல்பர்க் பகுதியை காட்சியகமாக மாற்றவும் ரூ1.51 கோடி நிதியை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து தீஸ்டா பெற்றதாகவும் அதை பாதிக்கப்பட்ட தங்களுக்காக தீஸ்டா செலவு செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என்றும் குடியிருப்புவாசிகள் புகார் கொடுத்திருப்பதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் தீஸ்டா செதல்வாட் கணவர் ஜாவீத் ஆனந்த், மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஜாகியா ஜாப்ரியின் மகன் தன்வீர் ஜாப்ரி உள்ளிட்டோரையும் போலீசார் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் போலீசாரின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை என்று மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தீஸ்டா மீதான வழக்கு பதிவு, பழிவாங்கும் செயல்தான். குஜராத் முதல்வர் மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரி மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில் இந்த வழக்கு போடப்பட்டிருப்பதன் மூலமே இது பழிவாங்கல்தான் எனத் தெரிகிறது. இந்த மோசடி வழக்கை குஜராத் அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.