லோக்சபாவில் நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு தெலுங்கானா மசோதா நிறைவேற்றம்!!
டெல்லி: லோக்சபாவில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு தெலுங்கானா தனி மாநில மசோதா இன்று கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
லோக்சபாவில் கடந்த வாரம் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எம்.பி.க்கள் கடும் அமளி செய்தனர். லோக்சபாவில் மிளகுப்பொடி வீசப்பட்டதால் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதையடுத்து தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற பாரதிய ஜனதாவின் உதவியை காங்கிரஸ் நாடியது. அப்போது தெலுங்கானா மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும், சீமாந்திராவுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று மீண்டும் லோக்சபாவில் இன்று தெலுங்கானா மசோதாவை மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள கூடாது என்று கூறி சபையின் மையப்பகுதியில் சீமாந்திரா எம்.பிக்களும் மத்திய அமைச்சர்களும் ஆவேச முழக்கமிட்டனர். இதனால் சபையில் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மாலை 3 மணிக்கு சபை கூடிய போதும் அமளி நீடித்தது. அப்போது மசோதா மீது எம்.பி.க்கள் கருத்தை கேட்கவும், விவாதம் நடத்தவும் பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் அமளி ஓயவில்லை. இதனால் லோக்சபா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பை நிறுத்துமாறு சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டார்.
அப்போது சஸ்பென்ட் செய்யப்பட்ட சீமாந்திரா எம்.பிக்கள் சபைக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் சபைக்குள்ளும் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாத வகையில் சபை காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.
அதே நேரத்தில் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட நிலையில் 3 திருத்தங்களுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை பாரதிய ஜனதா ஆதரித்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கானா அமைகிறது.
வெளிநடப்பு
லோக்சபாவில் இன்று தெலுங்கானா மசோதா மீது விவாதம் நடந்த போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் குரல் வாக்கெடுப்பின் போது இரண்டு கட்சி எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.