அமளி... ராஜ்யசபாவில் இன்று தெலுங்கானா மசோதா தாக்கல் இல்லை- சபை ஒத்திவைப்பு!
டெல்லி: தெலுங்கானா தனி மாநில மசோதா இன்று ராஜ்யசபாவில் நிலவிய கடும் அமளியால் தாக்கல் செய்யப்படவில்லை. ராஜ்யசபாவில் நாளை தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
லோக்சபாவில் தெலுங்கானா மசோதா நேற்று கடுமையான அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று ராஜ்யசபா காலை கூடியது முதலே தொடர்ச்சியாக அமளி நீடித்தது. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு, தமிழக மீனவர் பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் மாநிலங்களவை செயலரிடம் இருந்த தெலுங்கானா மசோதாவை பறிக்க தெலுங்கு தேசம் எம்.பி. பறிக்க முயன்றார். அப்போது மாநிலங்களவை செயலர் தாக்கப்பட்டார். இதற்கு ராஜ்யசபா தலைவராக இருந்த குரியன் மிகக் கடுமையாக எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தார்.
இதேபோல் தமிழக மீனவர் பிரச்சனையை முன்வைத்து அதிமுக எம்.பி. மைத்ரேயன், சபையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டார். அவரையும் குரியன் மிகக் கடுமையாக கண்டித்தார்.
பின்னர் மாலையில் சபை கூடிய போதும் அமளி நீடிக்கவே சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன. இதனால் இன்று தெலுங்கானா மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவிலை.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா, ராஜ்யசபாவில் நாளை தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications