காங்கிரஸ்- பாஜக இல்லாத மாற்று அணி: மம்தாவை நாளை சந்திக்கிறார் தெலுங்கானா முதல்வர்
காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மாற்று அணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாளை மம்தா பானர்ஜியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார்.
ஹைதராபாத்: பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்று அணி என்ற விவகாரத்தை முன்வைத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நாளை சந்திக்கிறார்.
தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ், நாட்டில் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மாற்றி அணி உருவாக வேண்டும். அரசியலில் தரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதுபோன்ற ஒரு அரசியல் மாற்று அணிக்கு தலைமை ஏற்க தான் தயாராக உள்ளதாக முன்னர் தெரிவித்திருந்தார்.
குற்றச்சாட்டு
நல்லதொரு தரமான மாற்றத்துடன் தேசிய அரசியலில் தான் பங்கேற்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்ததில் நாட்டுக்கு எந்த வித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என்பது ராவின் குற்றச்சாட்டாக உள்ளது.
மம்தா பானர்ஜி
நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு செயல்திட்டத்தை உருவாக்க விருப்பமுள்ள கட்சியின் தலைவர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 4-ஆம் சந்திரசேகர ராவை மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
3-ஆவது அணிக்கு அழைப்பு
அப்போது மம்தா தங்களின் முயற்சிக்கு துணையாக இருப்பதாக உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்ட மம்தா, 3-ஆவது அணிக்கு அழைப்பு விடுத்தார்.
மம்தாவுடன் ராவ் சந்திப்பு
இந்நிலையில் சந்திரசேகர ராவ் நாளை மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் நாளை மாலை 4 மணிக்கு சந்தித்து தரமான அரசியல் மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெலுங்கானா முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.