சீமாந்திராவுடன் 205 கிராமங்களை இணைக்க எதிர்ப்பு- தெலுங்கானாவில் முழு அடைப்பு!!
ஹைதராபாத்: போலாவரம் அணைக்கட்டு திட்டத்துக்காக 205 கிராமங்களை சீமாந்திராவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கோதாவரி நதியின் குறுக்கே செயல்படுத்த உள்ள போலாவரம் அணைக்கட்டு மற்றும் நீர்மின் திட்டத்தால் பாதிக்கப்படும் கம்மம் மாவட்டத்தில் உள்ள 205 கிராமங்களை சீமாந்திராவுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அவசர சட்டம் நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதற்கு தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் அவசர சட்டத்தை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்திற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமதி மற்றும் இடது சாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் கம்மம் உள்பட 10 மாவட்டங்களில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.