நன்றி கூற... சோனியாவைச் சந்தித்தார் சந்திரசேகர ராவ்
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமையவுள்ளதைத் தொடர்ந்து அதற்காக மிகத் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அவருக்கு தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றியதற்காக நன்றி கூறிக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது காங்கிரஸுடன் தனது கட்சியை இணைப்பது குறித்தும் சந்திரசேகர ராவ் முக்கியமாக பேசியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறு.
இன்று பிற்பகல் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் ராவ் அவரை சந்தித்துப் பேசினார். தனது குடும்பத்தினரோடு சோனியா வீட்டுக்குச் சென்றிருந்தார் ராவ்.
இந்த சந்திப்பு குறித்து ராவ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது ஒரு மரியைத நிமித்தமான சந்திப்பு, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி கூற சந்தித்தேன். வேறு அரசியல் முக்கியத்துவம் இதில் இல்லை. நாங்கள் அரசியலும் பேசவில்லை.
நான் சோனியா காந்திக்கு நன்றி சொன்னபோது திக்விஜய் சிங்குடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார் என்றார் அவர்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், காங்கிரஸும் இணைவது உறுதி என்று கூறப்படுகிறது. தெலுங்கானா பகுதியில் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கே முழுமையான செல்வாக்கு உள்ளது. எனவே அக்கட்சியை காங்கிரஸுடன் இணைத்து இப்பகுதியில் காங்கிரஸ் முழுமையாக லாபத்தை அள்ள திட்டமிட்டு வருகிறது.
ஆனால் தனது கட்சிக்கே அதிக இடங்கள் தேவை என்று சந்திரசேகர ராவ் வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸுடன் இணைந்தாலும் கூட தனது பிடி இறுக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.
கடந்த 10 வருடங்களாக சற்றும் தொய்வில்லாமல் தனித் தெலுங்கானாவுக்காக தீவிரமாக போராடியவர் சந்திரசேகர ராவ். தொடர்ந்து மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் நெருக்கடி கொடுத்து வந்தவர். ஆரம்பத்தில்ல் இவர் தெலுஙகு தேசம் கட்சியில் இருந்தார். சட்டசபையில் துணை சபாநாயகராகவும் இருந்தவர். பின்னர்தான் தனியாக வெளியே வந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை தொடங்கினார்.
2004 சட்டசபைத் தேர்தலை காங்கிரஸுடன் இணைந்து சந்தித்தார் ராவ். அப்போது ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. ராவுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியும் தரப்பட்டது. ஆனால் அவர் உடனடியாக விலகி வந்து விட்டார்.
அதன் பின்னர் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் இணைந்து காங்கிரஸுக்கு எதிராக களம் கண்டார். ஆனால் தெலுங்கானாவில் அப்போது ராவ் கட்சிக்கு பெரும் அடி விழுந்தது அதாவது 10 சட்டசபைத் தொகுதிகளையும், 2 லோக்சபா தொகுதிகளையும் மட்டுமே ராவ் கட்சி வென்றது.
இதையடுத்து யாருடனும் சேராமல் தொடர்ந்து தனித்து செயல்பட்டு வருகிறார் ராவ். தற்போது தெலுங்கானா தனி மாநிலம் அமையவுள்ளதைத் தொடர்ந்து தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பு தொகுதிப் பங்கீட்டில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் சோனியாவுடனான அவரது சந்திப்பு இன்று நடந்துள்ளது.