“திரும்ப திரும்ப நடக்குது.. மன்னிப்பு கேளுங்க” போலீஸ் வெப்சைட்டை முடக்கி ‘போர்டு’ மாட்டிய ஹேக்கர்கள்
தானே : நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்துக்காக இந்திய அரசு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகாராஷ்டிராவின் தானே நகர காவல்துறை வெப்சைட்டை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.
நபிகள் நாயகம் குறித்து பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டிக்கும் வகையில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நபிகள் நாயகம் பற்றி பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து ஹேக்கர்கள் தானே காவல்துறை இணையதளத்தை முடக்கினர்.

நுபுர் சர்மா
கடந்த சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார். இது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நுபுர் சர்மா பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஹேக்கர்கள்
நபிகள் நாயகம் பற்றி நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து சில ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள அரசு, தனியார் இணையதளங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கினர். இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம், தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை அமைப்பு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், நாக்பூரிலுள்ள அறிவியல் கல்வி நிறுவனம், டெல்லி பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட பல அமைப்புகளின் இணையதளங்கள் கடந்த சில நாட்களில் முடக்கப்பட்டுள்ளன.

காவல்துறை பக்கம் முடக்கம்
இந்நிலையில் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் உலகில் வாழும் இஸ்லாமிய மக்களிடம் இந்திய அரசு பகிரங்க மன்னிப்பை தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தானே நகர காவல்துறை இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். ஹேக் செய்யப்பட்ட தானே காவல் துறையின் வலைதள பக்கத்தில் ஒரு நிலையான தகவல் திரையில் தெரிந்தது.

மன்னிப்பு கேளுங்கள்
அந்த திரையில், "இந்திய அரசுக்கு வணக்கம். அனைவருக்கும் வணக்கம். திரும்பத் திரும்ப மதம் சார்ந்த சிக்கல்களை இஸ்லாமிய மக்களுக்கு கொடுத்து வருகிறீர்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களிடம் விரைந்து உங்களது மன்னிப்பை தெரிவிக்க வேண்டும். எங்களுடைய இறைத்தூதரை இழிவு செய்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு நிற்க மாட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீட்பு
மேலும், இந்த ஹேக்கிங்கை One Hat Cyber Team என்று குழு செய்துள்ளதாக அந்தப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இணையதளம் ஹேக் செய்யப்பட்ட நிலையில் தானே சைபர் பிரிவு காவலர்கள் அதனை சிறிது நேரத்திலேயே சரி செய்தனர். தற்போது அந்த வலைதளம் எப்போதும்போல் இயங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications