டிவிட்டரில் பெங்களூர் போலீஸ் கமிஷனர்: குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார்
பெங்களூர்: குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக பெங்களூரில் குமுறல்கள் அதிகரித்துள்ள நிலையில், நவீன தகவல் தொடர்புகளை தன்வசப்படுத்தி மக்களுடன் உரையாட முடிவு செய்துள்ளது பெங்களூர் மாநகர காவல்துறை. இதற்காக டிவிட்டரில் கமிஷனர் அலுவலகம் இணைந்துள்ளது.
பெங்களூர் நகரில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலாத்கார சம்பவங்களை கண்டித்து நேற்று நகரில் ஒருநாள் பந்த் போராட்டமும் நடந்தது.
இந்நிலையில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் டிவிட்டரில் இணைந்துள்ளது. புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள எம்.என்.ரெட்டி, டிவிட்டரில் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டியதாக கூறுகின்றனர் காவல்துறையினர்.
@cpblr என்ற பெயரில் உள்ள டிவிட்டர் கணக்கை, பெங்களூர் நகர மக்கள் தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். குற்றச்செயல்கள் எங்காவது தென்பட்டால் அதுகுறித்தும் தகவல் தரலாம்.
ஏற்கனவே பலரும் ஆர்வத்தால் கமிஷனரிடம் புகார் அளிக்க தொடங்கிவிட்டனர். 'இந்திராநகரில் பெண்களை ஈவ் டீசிங் செய்கிறார்கள். நடவடிக்கை எடுங்கள்' என்ற ஒரு டிவிட் இதற்கு உதாரணம்.
புகார்களுக்கு கமிஷனர் அலுவலகம் பதிலும் அளிக்கிறது. மேற்கண்ட புகாருக்கு கமிஷனர் அலுவலகம் அளித்துள்ள தனது பதிலில் "உடனடியாக லோக்கல் காவல் நிலையத்திற்கு இந்த தகவல் அளிக்கப்படும். அப்படியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் டிவிட்டரில் புகாரை தெரிவியுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
டிவிட்டர் மூலம் போலீஸ் கமிஷனரை தொடர்புகொள்வது எளிதாக உள்ளதாக பெங்களூர் நகர மக்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.