காஷ்மீர் தேர்தலில் பா.ஜ.க. ஜெயித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்: ஒமர் அப்துல்லா அறிவிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வென்றுவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் எப்படியாவது 44 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது பாரதிய ஜனதா.
இந்நிலையில் ஸ்ரீநகரில் பாஜகவின் செயல்திட்டம் குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நான் அப்படி ஒரு நாளை பார்க்க விரும்பவில்லை. அப்படிப்பட்ட ஒரு நாளும் வரப்போவதில்லை. ஜம்மு- காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் நாள் வருமானால், அரசியலை விட்டே ஓய்வு பெற்று விடுவேன்.
வரும் தேர்தலில் காங்கிரஸும் எங்கள் தேசிய மாநாட்டுக் கட்சியும் தனித்தனியாக நின்று தேர்தலை சந்திப்பதை தான் விரும்புகிறோம் என்றார்.