3 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..'இது சிவபெருமானின் அவதாரம்'..வரிசையாக நின்று வழிபடும் மக்கள்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி பிறந்துள்ளது.'கடவுளின் அவதாரம்' என்று கூறி கிராம மக்கள், கன்றுக்குட்டியை வழிபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை மத நம்பிக்கையுடன் இணைக்க கூடாது என்று கால்நடை டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அப்போ சீக்கிரமே லாக்டவுன் தளர்வுகளா? 20 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் செம மாற்றம்.. குட்நியூஸ்
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டம் நவகான் லோதி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த் சந்தேல்.
விவசாயியான இவர் ஜெர்சி பசுக்களை வளர்த்து வருகிறார். கடந்த 13-ம் தேதி ஜெர்சி பசு பெண் கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது. அதிசயிக்கும்விதமாக அந்த கன்றுக்குட்டி 3 கண்களுடனும், நாசியில் நான்கு துளைகளுடனும் பிறந்ததால் விவசாயி ஹேமந்த் சந்தேல் ஒரு பக்கம் ஆச்சரியமும், மறுபக்கம் அதிர்ச்சியும் அடைந்தார்.
அதிசய கன்றுக்குட்டி
இது பற்றி ஹேமந்த் சந்தேல் கூறுகையில், ' இதனை பார்த்தவுடன் என்னசெய்வது என்றே எனக்கு தெரியவில்லை. கன்றுக்குட்டியின் வால் வித்தியாசமாக உள்ளது. அதன் நாக்கும் சாதாரண கன்றுகளை விட நீளமானது' என்று கூறினார். ''கால்நடை மருத்துவர் இந்த கன்றுக்குட்டியை பார்வையிட்டு நலமாக இருப்பதாக கூறினார். ஆனலும் நீளமான நாக்கு காரணமாக, பசுவிடம் பால் குடிப்பதில் கன்றுக்குட்டி சிரமத்தை எதிர்கொள்கிறது. நாங்கள் அதற்கு உணவளிக்க உதவுகிறோம்'' என்றும் விவசாயி ஹேமந்த் சந்தேல் தெரிவித்தார். அபூர்வ உடலமைப்புடன் பிறந்த கன்றுக்குட்டி நவகான் லோதி கிராமம் முழுவதும் பிரபலமாகி விட்டது.
இது சிவபெருமானின் அவதாரம்
இந்த அரிய கன்றுக்குட்டி பற்றிய செய்தி பரவியதும், அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்கள் ஹேமந்த் சந்தேலின் வீட்டிற்குச் சென்று சிவபெருமானின் அவதாரமாக வழிபடத் தொடங்கியுள்ளனர். 'கடவுளின் அவதாரம்' என்று கூறி கன்றுக்குட்டியை வழிபடும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதாவது ஹேமந்த் சந்தேலின் வீட்டிற்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து கன்றுக்கு பூக்கள் மற்றும் தேங்காய்களை கொடுத்து கன்றுவை வணங்கி வருகின்றனர்.
கால்நடை மருத்துவர் சொல்வது என்ன?
அதிசய கன்றுக்குட்டி தொடர்பாக தனியார் கால்நடை மருத்துவர் கமலேஷ் சவுத்ரி கூறுகையில், 'இது ஒரு அதிசயமாக கருதப்படக்கூடாது. கருவின் அசாதாரண வளர்ச்சியால் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. பொதுவாக, இதுபோன்ற கன்றுகள் ஆரோக்கியத்தில் பலவீனமாக இருக்கும்' என்றார்.
மூடநம்பிக்கை கூடாது
''இதுபோன்ற சம்பவங்களை மக்கள் நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கையுடன் இணைக்கக்கூடாது. பல சம்பவங்களில், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், விழிப்புணர்வு இல்லாததால், ஊனமுற்ற விலங்குகளை வழிபடுவதைக் காண முடிகிறது. விலங்குகளின் இத்தகைய குறைபாடுகள் குறித்து அறிவியல் ரீதியாக மக்களுக்கு விளக்க வேண்டும்'' என்று தினேசா மிஸ்ரா என்ற மருத்துவர் கூறினார்.