ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த சுப்ரீம்கோர்ட்.. ஹைகோர்ட்டை அணுகிய கன்யாகுமார்
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார் மீதான ஜாமீன் மனுவை ஏற்றுக்கொள்ள சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டதால், ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனநாயக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது, இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக வெளியான வீடியோ ஆதாரங்கள் அடிப்படையிலும், மாணவர் சங்கக தலைவர் கன்யாகுமார் தேச பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கன்யாகுமார் ஆஜர்படுத்தப்பட்டபோது வக்கீல்கள் சிலர் சூழ்ந்து கொண்டு அவரை தாக்கினர். மார்ச் 2ம் தேதிவரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, கன்யாகுமார் சார்பில் அவரது வழக்கறிஞர் குமார் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவில், "கன்யா குமார் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கன்யா தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
இதன் காரணமாக அவர் விசாரணை நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்ய அச்சப்படுகிறார். எனவே, கன்யா குமார் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. கன்யாகுமார் சார்பில், வாதிடும்போது, கீழ் நீதிமன்றத்தில் என் மீது தாக்குதல் நடைபெற்றது. எனது உயிருக்கு மட்டுமல்ல, எனக்காக வாதிடும் வழக்கறிஞர்கள் உயிருக்கும் ஆபத்து இருப்பதால், சுப்ரீம்கோர்ட்டை அணுகியுள்ளோம்.
எனக்கு எதிராக தேசதுரோக சட்டத்தை பாய்ச்சியுள்ளது தவறானது. மேலும், சிறைக்குள் சக கைதிகளால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அச்சமாக உள்ளது, என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்கப்போவதில்லை என்று சுப்ரீம்கோர்ட் அறிவித்துவிட்டது. ஜாமீன் மனுவை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யுமாறும், நேரடியாக சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடத்தும் மரபை ஊக்குவிக்க முடியாது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துவிட்டது.
போதிய அளவு பாதுகாப்பை பலப்படுத்தியதை உறுதி செய்தபிறகு கீழ் நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளுங்கள் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, பிற்பகலில், டெல்லி ஹைககோர்ட்டில் கன்யாகுமார் ஜாமீன் மனுவை அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். கன்யாகுமார் வக்கீல்கள் வருகையால் ஹைகோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்பது குறித்து ஹைகோர்ட் முடிவு செய்யும். வழக்கு இன்று விசாரணைக்கு வராது என்று தெரிகிறது. கோர்ட் அட்டவணையிட்ட பிறகு, அனேகமாக வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரலாம்.
இதனிடையே, இதே சம்பவம் தொடர்பாக, தேசவிரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள, டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கிலானிக்கு ஜாமீன் வழங்க, டெல்லி பாட்டியாலா கோர்ட் இன்று மறுத்துவிட்டது.