தமிழக பாஜக தலைவராக தமிழிசையே நீடிப்பார்... இதில் எந்த மாற்றமும் இல்லை- பாஜக தலைமை
தமிழக பாஜக தலைவராக தமிழிசையே நீடிப்பார் என்றும் இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பாஜக பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.
டெல்லி: தமிழக பாஜக தலைவராக தமிழிசையே நீடிப்பார் என்று பாஜக பொதுச் செயலாளர் முரளிதரராவ் டுவிட்டரில் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
மாநிலத்துக்கு மாநிலம் உள்ள கட்சிகளில் உள்கட்சி பூசல் என்பது இருக்கத்தான் செய்யும். அதிலும் பாஜக ஒன்றும் விதிவிலக்கல்ல. தமிழக பாஜக தலைவராக தமிழசை சவுந்திரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
அவர் நியமிக்கப்பட்ட காலம் முதல் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் போர்க் கொடி உயர்த்தினர். இந்த கோரிக்கை தொடர்பாக டெல்லிக்கு நடையாய் நடந்தனர். இந்நிலையில் ஆர்கே நகர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
மீம்ஸ்கள்
இதில் நோட்டாவைக் காட்டிலும் பாஜக மிக குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளையே பெற்றது. இதை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் போட்டு பாஜகவை நெட்டிசன்கள் சீண்டினர். இதை சாக்காக வைத்துக் கொண்டு ஆர்கே நகர் தேர்தல் தோல்விக்கு தமிழிசை பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மீண்டும் போர்க் கொடி உயர்த்தினர்.
தமிழிசை விளக்கம்
இதையடுத்து டெல்லிக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்கள் எனக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை என்றும், ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு என்னுடன் யாரும் வரவில்லை என்றும் தமிழிசை விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தமிழிசை உள்பட மூத்த நிர்வாகிகளிடம் இருந்து பாஜக தலைமை ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்டது.
பாஜக தலைமை
இதனிடையே தமிழகத்தில் நடைபெறும் ஒரு விஷயத்துக்கு தமிழிசை ஆதரவு தெரிவித்தால், அதை பொன்னார் எதிர்ப்பார், பொன்னார் ஆதரித்தால் அதை தமிழிசை எதிர்ப்பார். இந்த நெருப்பு புகைக்காமல் சிறிது காலம் ஓய்ந்திருந்த நிலையில் தமிழிசைக்கு ஆகாத கோஷ்டியினர் சிலர் தமிழிசையை நீக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பொதுச் செயலாளர் முரளிதரராவ் அறிக்கை அனுப்பியதாக செய்திகளை வெளியிட்டனர். இதை தமிழிசையே மறுப்பும் தெரிவித்தார்.
|
தமிழிசை நீடிப்பார்
இந்நிலையில் இந்த விவகாரம் சூடு பிடித்து வருவதால் பாஜக தலைமை தாமாக முன்வந்து விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறுகையில் தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார்.
முற்றுப்புள்ளி
அவர் மாற்றப்படவுள்ளதாக கூறும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை ஆகும். உண்மைக்கு புறம்பானவை, உள்நோக்கம் கொண்டவை என்று டுவிட்டரில் முரளிதரராவ் விளக்கமளித்துவிட்டார். எனவே இனி தமிழிசை நீக்கப்படவுள்ளார் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புவோமாக.